Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயாவதி பாணியில் ரஞ்சித்? உபிகள் குற்றச்சாட்டு? நீதி கேட்கும் நீலம்? பிரிந்து நிற்கும் திருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் இப்போது சமூகவலைத்தளங்களில் தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் என்று கோணத்தில் சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக உடன்பிறப்புகள் சிலருக்கும் ரஞ்சித் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் என்ற சர்ச்சை மிகவேகமாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் குரலுக்குப் பின்னால் திமுகவும் முற்போக்குவாதிகளும் இருக்கிறார்கள் என்று இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு குற்றச்சாட்டை நேற்று நடந்த ஆம்ஸ்ட்ராங் நீதி வேண்டி நடத்தப்பட்ட பேரணியில் பேசும் போது முன்வைத்துள்ளார்.

Dmk Ranjith

அவர், 'ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட போது, அவரை ரவுடி என்று எழுதியவர்கள் திமுக ஐடி விங்க்கை சேர்ந்தவர்கள். ஆம்ஸ்ட்ராங் ரவுடியா? அவர் ரடிவு என்றால் நாங்களும் ரவுடிதான். தலித்துகள் ஒன்று சேருவது பற்றிப் பேசினாலே உடனே எங்களின் பின்னால் யாரோ இருக்கிறார்கள். பி டீம் என்று பேசுகிறார்கள்' என்றும் ஆவேசமாக ஒரு விசயத்தை முன்வைத்திருந்தார்.

இந்தப் படுகொலை தொடர்பாக திமுகவுக்கும் ரஞ்சித்திற்கும் இடையே ஒரு கருத்து மோதல் நடந்து வருகிறது. இந்தப் பேரணிக்கு முன்னதாக பேசிய ரஞ்சித், 'உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்தக் கேள்விகளை முன்வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?' என்று விமர்சித்திருந்தார்.

தொடக்கம் முதல் இந்தப் பேரணி நீலம் இயக்கத்தின் சார்பில்தான் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆகவே கட்சி சார்பு இல்லாமல் தலித்கள் பங்கேற்க வேண்டும் என்று ரஞ்சித் குரல் எழுப்பிவந்தார். இடைவில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் ஆளும் கட்சியை நோக்கி இருக்கவே, தங்களின் கூட்டணி தொடர்பான உரல்களுக்கு இது வழிவிடுமோ என்று அஞ்சி விசிக தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்று பகிரங்கமாக திருமாவளவன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பேரணியை முன்வைத்து திமுகவையும் விசிகவையும் தனிமைப்படுத்தும் முயற்சி நடப்பதாக திருமாவளவன் ஒரு வாதத்தை வீடியோ பதிவு மூலம் முன்வைத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியை விசிக தொண்டர்கள் தனியே நடத்திக் கொள்வதில் பிரச்சினை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், மாயாவதியை வைத்து மறைமுகமாக உபியில் வெற்றி பெற்றதைப் போல ஒரு கணக்கை பாஜக தமிழ்நாட்டில் செய்ய நினைக்கிறது என்பது திமுக தரப்பினர் முன்வைக்கும் வாதமாக உள்ளது.

இது பற்றிப் பேசிய டாக் அசோக், "ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரஞ்சித் ஒரு குழப்பமான நிலைப்பாட்டில் தான் பேசி வருகிறார். நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான ஒத்துழைப்பைத் தரவில்லை என்று ரஞ்சித் சொல்லி இருந்தார். ஆனால், பிஎஸ்பி கட்சி வழக்கறிஞர் அரசு நல்ல ஒத்துழைப்பை அளித்தது என்று சொல்லி இருந்தார், அதுவே முரண்பாடாக இருந்தது. திருமாவளவன் சமூக ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்டு வருகிறார்.

ஆனால், ரஞ்சித் அதற்கு நேரெதிரான ஒரு அரசியலைப் பேசுகிறார். அவரது போக்கு எப்படி உபியில் மாயாவதியை வைத்து தலித்துகளை பாஜக தனிமைப்படுத்தியதோ அதேபோல தமிழ்நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தொடர்ந்த தனியாக நிற்பது பற்றியே பேசுகிறார். பொதுச் சமூகத்திற்குள் கலப்பது பற்றி அவர் பேசுவதே இல்லை" என கூறியுள்ளார்.

Dmk Ranjith

பத்திரிகையாளர் கார்த்திகேயன், "இந்திய அளவில் பாஜகவை மிகத் தீவிரமாக எதிர்க்கும் தலித் தலைவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் திருமாவளவன். மற்றொருவர் உபி எம்பி சந்திரசேகர் ஆசாத். எனவேதான் பாஜக மறைமுகமாக இதைத் தமிழ்நாட்டிலும் செய்ய முயல்கிறது. இந்த முறை விசிக தனித்து நின்று வெற்றி பெற்று கட்சியின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அது பாஜகவுக்கு ஒரு இடைஞ்சலாக உள்ளது. அல்லது வலதுசாரி சிந்தனை கொண்ட வேறு யாருக்கோ அது நெருடலைத் தருகிறது. ஆகவேதான் தலித்துகளைத் தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது " என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்தைப் பதிவிட்டுள்ள எவிடென்ஸ் கதிர், "தலித் அரசியல் என்பது தலித்துகள் மட்டுமே ஒன்று சேர்ந்து அரசியல் படுத்தப் படுவது என்று புரிந்து கொள்வது அறியாமை. தலித் அரசியல் என்பது சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அனைவரும் ஒன்று சேருவது ஆகும்.ஆகவே தலித் அரசியல் என்பது எளிய மக்களின் சனநாயக அதிகாரம். சகோதரத்துவ அனைவரையும் உள்ளடக்கிய பன்மைத்தன்மை கூறுகளைக் கொண்டதாகும்.

ஒருவர் தலித் அரசியலுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார் என்றால் அவருக்கு இரண்டு பிரச்சினைகள் உண்டு. ஒன்று நம்பிக்கை இன்மை. இரண்டு அவர் மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆதிக்க புத்தி. நம்மால் அவன் நல்லா இருக்கனும். ஆனால் நம்மை விட அவன் நல்லா இருந்துவிடக் கூடாது. இதுதான் இன்றைய மிடில் கிளாஸ் முற்போக்காளர்களின் புத்தி. திருமா மீது திமுக அபிமானிகள் அளவு கடந்த அன்பினையும் ஆதரவினையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.மிக்க மகிழ்ச்சி. ஆனால் விடுதலை சிறுத்தைகளுக்குத் தேர்தலில் மிகவும் குறைந்த இடங்களைக் கொடுத்து திமுக அவமானப் படுத்தும் போது மட்டும் அந்த அன்பர்கள் காணாமல் போய் விடுகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் இளையராஜா, "ரஞ்சித்தைப் படிக்க வைக்க உதவி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். அதை அவரது அண்ணனே சொல்லி இருக்கிறார். ரஞ்சித் அம்மா ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கே வந்து தங்கிவிட்டுப் போவார். ஆகவே, இது ஒரு குடும்ப உறவு. ரஞ்சித் அவரது குடும்ப உறவை இழந்திருக்கிறார். அந்த ஆதங்கத்தில் பேசுகிறார்.

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அரசுக்கு நெருக்கடி தரக்கூடாது என்றும் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் அவர் நீலம் பேரணியில் பங்கேற்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார். அவர் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

திமுக அரசுக்கும் இந்தக் கொலைக்குச் சம்பந்தம் இல்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்றலாமே? அதன் மூலம் இந்தக் களங்கம் நீங்கிவிடுமே? ஏன் அதை திமுக செய்ய தயங்குகிறது? 66% வாக்குகளை தலித் மக்களிடம் இருந்து திமுக பெற்றுள்ளது. அப்படி என்றால் தலித் தலைவர் ஒருவரைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு தானே இருக்கிறது?" என்று எதிர்க்கேள்வியை முன்வைக்கிறார் இவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+