இந்தியாவில் 2080-க்குள் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறையும்.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்!
சென்னை: இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இதே வேகத்தில் பயன்பாடு இருந்தால் 2080 ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் மட்டம் தற்போது இருப்பதை விட மூன்று மடங்காக சரியும் என்று ஆய்வில் எச்சரிக்கபட்டுள்ளது.
இந்தியாவில் பருவமழை பொய்த்து போவது உள்ளிட்ட காரணங்களினால் நீர் நிலைகளில் பெரும்பாலான நேரங்களில் போதிய நீர் இருப்பது இல்லை. இதனால், மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதேபோல், விவசாயிகளும் பெருமளவு நிலத்தடி நீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால், இந்தியாவில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறி வருகின்றன. இந்த நிலையில், தற்போதைய விகிதத்தில் இந்திய விவசாயிகள் தொடர்ந்து நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தால் நிலத்தடி நீர் வீழ்ச்சி விகிதம் 2080-ல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உணவு மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சயின்ஸ் அட்வான்ஸ்சஸ் எனப்படும் இதழில் வெளியாகியிருக்கும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:- நிலத்தடி நீர் குறைந்து போவது இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தாக அமையக் கூடும். இது இந்தியாவின் சர்வதேச அளவிலும் சிக்கலாக அமையலாம்.
நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இந்தியா இருப்பதும் பிராந்தியம் மற்றும் சர்வதேச உணவு சங்கிலியில் முக்கிய வளமாக இந்தியாவுமே இருப்பது கவலைக்குரிய அம்சம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் பற்றிய வரலாற்று தரவுகள் மற்றும் கிளைமேட் மற்றும் பயிர்களுக்கான நீர் தேவை.. எடுக்கப்படும் நீரின் சதவிகிதம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications