பத்திரப்பதிவு மாறுது.. சுயசான்று முறை கட்டிட அனுமதியில் சூப்பர் சேஞ்ச்.. தமிழக பதிவுத்துறை வேற லெவல்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து வகையான கட்டிட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்பட்டு, குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர், விரைவாக அனுமதி பெற புதிய திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், 10,000 சதுரடி வரையிலான கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்கி வருகின்றன.. இவைகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

கடன் வசதி: எனவே, வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலைமையும் வந்தது.. இதன்காரணமாக, வெளி மாநிலங்களில் உள்ளதை போலவே, சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக கிளம்பின.
இதையடுத்து, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், சுயசான்று அடிப்படையில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது... அதன்படி, "ஒரு நபர், 2,500 சதுர அடி நிலத்தில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்டுவதற்கான வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை, சுயசான்று அடிப்படையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக, சதுர அடிக்கு, 53 ரூபாய் கட்டணத்தையும் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்; ஒப்புகை சீட்டு உடனடியாக கிடைத்து விடும்.
விண்ணப்பதாரர்: இதை ஆதாரமாக வைத்து, விண்ணப்பதாரர்கள் வீடு கட்டும் பணியை துவக்கலாம். இந்த கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற தேவையில்லை என்பதால், மக்களுக்கும் எளிதாகயிருக்கும்" என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, 10,000 சதுரடி வரையிலான குடியிருப்புகளுக்கு, கட்டிட அனுமதி அளிக்கும் அதிகாரம், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டாலும், இதை பயன்படுத்துவதில், பல்வேறு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாகவும், சில அரசியல் தலையீடுகள் உள்ளதாகவும் புகார்கள் கிளம்பின.. எனவேதான், உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து வகையான கட்டிட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்பட்டன.
ஆன்லைன் திட்டம்: இதில், குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர், விரைவாக அனுமதி பெற புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரை வீடு கட்டுவோர், குறிப்பிட்ட சில ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சமர்ப்பித்தால் போதும்.. அடுத்த சில நிமிடங்களில், அவர் செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் தெரிவிக்கப்பட்டுவிடும்..
கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில், கட்டிட அனுமதியை எளிதில் பெற முடிவதால், அபரிமிதமான வரவேற்பை மக்கள் தர துவங்கியிருக்கிறாரகள்.
வரவேற்பு: இந்த 2 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 9,000 பேருக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாம்.. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், 15,000 பேருக்கு மேல் கட்டிட அனுமதி பெற்றிருக்கிறார்களாம். இந்த அளவுக்கு மக்கள் வரவேற்பு தந்துள்ளதால், இதில் கூடுதல் வசதிகளை அனுமதிப்பது குறித்தும், மேலும் சில தளர்வுகளை வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
புதிய கோரிக்கை: இதனிடையே, புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, கூட்டு மதிப்பு நிர்ணயிப்பதற்கான கோப்புகளை, பதிவுத்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன..
புதிய மனை பிரிவுகளுக்கு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது தொடர்பாக, சில நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளை வாங்க முன்வரும் மக்கள், பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் தவிப்பதால், கட்டிடங்களுக்கான கூட்டு மதிப்பு நிர்ணய விஷயத்திலும் நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சலசலப்புகள் கிளம்பியிருக்கின்றன.. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் முடங்குவதால், இந்த விஷயத்திலும் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications