தமிழகம் ரீவைண்ட் 2020: காதல் மன்னன் காசி கைது முதல் வேல் யாத்திரை வரை மறக்கமுடியுமா
2021 பிறக்கப் போகிறது. 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற டாப் 5 மறக்கமுடியாத சம்பவங்களைப் பார்க்கலாம்.
சென்னை: தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்துள்ளன. பல சம்பவங்களை நம்மை அசைபோட வைக்கும். சில சம்பவங்கள் திரும்ப நினைக்க வைக்கும். 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகும் இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய சம்பவங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் எத்தனையோ சம்பவங்களை நடைபெற்றிருந்தாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்வாணையம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததும் தெரிய வந்தது.
சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
கமல் வீட்டில் கொரோனோ விழிப்புணர்வு ஸ்டிக்கர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒப்பட்டன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தில் பாஸ்போர்ட் அடிப்படையில் வந்த தகவலை அடுத்து கமல்ஹாசனின் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்தப் பட்டதாக நோட்டீஸ் ஒட்டியதாகவும் இதையடுத்து இந்த அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீசை அப்புறப்படுத்தியதாகவும் விளக்கம் அளித்தனர்.
Recommended Video
காசி கைது காதல் மோசடி மன்னன்
பல பெண்களை ஏமாற்றி காதலித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய காதல் மன்னன் காசி கைது சம்பவம் 3வது இடத்தில் உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர், பள்ளி கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் போன்றோரை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு நட்பாக பழகியவர். தனது கட்டுமஸ்தான உடலை காட்டி நட்பாக பழகியவர்களை காதல் வலையில் சிக்கவைப்பது அவரது பாணி. பணக்கார பெண்களை மட்டும் குறிவைக்கும் காசி , காதலில் சிக்கும் பெண்களை உருகி காதலிப்பது போன்று நடித்து அவர்களிடம் உல்லாசம் அனுபவிப்பார். பெண்களுடன் தனிமையில் இருப்பதை நண்பர்கள் உதவியுடன் பெண்களுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்யும் காசி வீடியோவை வைத்து பெண்களை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது போன்று காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். காசி மீது பாலியல் மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளது இப்போது சிறைப்பறவையாக காலம் தள்ளி வருகிறார் காசி.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணம்
வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட துரைக்கண்ணு இங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவசாயிகளுக்கு பிடித்தமான அமைச்சர் கொரோனாவிற்கு பலியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வேல் யாத்திரை
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. பாஜக தலைவர் முருகன் தலைமையில் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு விபத்தில் சிக்கினார். நிவர் புயல் தாக்கவே வேல் யாத்திரையில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து எந்த வித பரபரப்பும் இன்றி வேல் யாத்திரை டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைந்தது.