“10 வருட உழைப்பிற்கு பலன் இல்லை.. பணம் வாங்கிக்கொண்டு பதவி”.. சென்னை தவெக மா.செ மீது குற்றச்சாட்டு!
சென்னை: 10 வருட உழைப்பிற்கு பதவி இல்லை என சென்னை ஆர்கே நகர் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலாளர் சொன்னாலும் மதிக்காத மாவட்ட செயலாளர், ஆதரவாளர்களுக்கு மட்டுமே பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்குவதாக மாவட்ட செயலாளர் மீது தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய் தலைமையிலான தவெகவும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தவெகவின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்புகள் எழுந்து வருகின்றன.

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் தவெக மாவட்ட செயலாளர், கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவிகளை நியமனம் செய்வதாகவும், கட்சியை வளர்க்காமல், கட்சி நிர்வாகிகள் காசில் பிறந்தநாள் கொண்டாடுவதாகவும் ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகி பாபு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்காமல், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பதவி என செயல்படுவதாகவும், 10 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலப் பணிகளைச் செய்து வந்த தன்னை ஒதுக்கி வைத்துள்ளதாகவும், பொதுச் செயலாளர் அறிவுறுத்தியும் கூட தனக்குப் பதவி தரவில்லை என்றும் பாபு குற்றம்சாட்டி உள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தவெகவின் பனையூர் அலுவலகத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, அக்கட்சியின் தலைவர் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இரவு வரை கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தலைமை கண்டுகொள்ளாத நிலையில், அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.
இதுபோல, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், தவெக வினர், கட்சி பதவி தொடர்பாக குமுறல்களைக் கொட்டி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், கட்சியினரின் இந்தக் குமுறல்கள் தவெகவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications