ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்
Recommended Video
சென்னை: ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீஸார் தடுத்த போது லாரி மோதியதில் பெண்ணின் கால்கள் சக்கரத்தில் சிக்கி நசுங்கியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா (23). இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு பிரியா, செங்குன்றத்தை அடுத்த கே கே நகர் அருகே காவல் உதவி மையம் அருகில் உள்ள பேக்கரியில் தனது தாயின் பிறந்தநாளுக்காக கேக் வாங்கிக் கொண்டிருந்தார். வாங்கிவிட்டு செங்குன்றம்- திருவள்ளூர் சாலையை கடக்க முயன்றார்.

ஹெல்மெட்
அப்போது காவல் உதவி மையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ குமணன் தலைமையிலான போலீஸார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து கொண்டிருந்தனர்.

பிரியா
அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி, அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பிரியாவின் இரு கால்களும் நசுங்கியது.

திருவள்ளூர் சாலை
இதையடுத்து அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் பிரியா கீழே விழுந்ததற்கு போலீஸார்தான் காரணம் என கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செங்குன்றம்- திருவள்ளூர் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

லாரி
அப்போது அங்கிருந்த ஊர்க்காவல் படை வீரரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி எரித்தனர். பிரியா மீது மோதிய லாரியை அதன் டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த லாரியையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

தடியடி
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தி தலைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications