மாங்காட்டில் பயங்கரம்.. வேட்டை நாய் கடித்ததில் காயமடைந்த சிறுமி.. ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதி
சென்னை: மாங்காட்டில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை வேட்டைநாய் ஒன்று கடித்து குதறியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாங்காடு, ஸ்ரீ ராமஜெயம் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தனா (12). இவர் நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக அந்த தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அதே தெருவில் உள்ள வீட்டில் சுகந்த் என்பவர் ராட் வில்லர் என்ற உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தபோது அந்த நாய் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த கீர்த்தனாவை தாக்கி அவரை கடித்து குதறியது. தன்னை காத்துக் கொள்ள கீர்த்தனா ஓட முயன்றார்.

நாய்
இருப்பினும் வேட்டைநாய் என்பதால் சிறுமியை துரத்திச் சென்று கவ்விப் பிடித்தது. வலி தாங்க முடியாமல் கீர்த்தனா கதறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நாயிடம் இருந்து சிறுமியை மீட்க போராடினார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவு
ஆனால் சிறுமியை விடாமல் கடித்து குதறி கொண்டிருந்தது. இறுதியாக போராடி அந்த நாயிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பலத்த காயமடைந்த அந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பராமரிக்காத சம்பவம்
நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் போது அதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது மேலும் ஒருவரை அந்த நாய் கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: இந்த நாயை முறையாக பராமரிக்காத காரணத்தால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

படுமோசம்
இந்த சம்பவத்திற்கு பின்பு இந்த தெருவில் நடந்து செல்ல மிகவும் பயமாக உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்ததால் நாயிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றி விட்டோம். ஆட்கள் யாரும் இல்லை என்றால் அந்த சிறுமியின் நிலைமை இன்னும் படுமோசமாகி இருக்கும். எனவே இந்த நாய் மீண்டும் இங்கே வளர்க்கப்பட்டால் அது அச்சுறுத்தலாக இருக்கும். இதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications