சென்னையில் அடுத்த அதிரடி.. துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. யார் இந்த சேதுபதி? பகீர் பின்னணி
சென்னை: சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி என்ற சேதுவை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் கைதான ரவுடி சேதுபதி யார்? பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் பெரம்பூரில் அவரது வீட்டு முன்பு கடந்த 5ம் தேதி மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும் அந்த கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு அவர், ‛‛தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தலித் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்'' என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக அருண் நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் புது கமிஷனராக அருண் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவடிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பாடம் புகட்டப்படும் என அவர் கூறிய நிலையில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1 வாரத்தில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 81 குற்றவாளிகளை நேரடியாக தணிக்கை செய்து 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி ரவுடிகளின் வீடுகளுக்கு நேரடியாக போலீசார் சென்று குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் என்கவுண்ட்டர் நடவடிக்கையும் தொடங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி திருவேங்கடம் மாதவரம் பகுதியில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதில் அவர் பலியானார். அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது என்கவுண்ட்டர் செய்யப்பட்டதில் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இப்படியாக ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் தான் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பிரபல ரவுடி சேது என்ற சேதுமபதியை துப்பாக்கி முனையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ரவுடி சேதுபதி ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது சேதுபதி போலீசாரை ஆயுதங்களை வைத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். இவரது பெயர் ரவுடி பட்டியலின் சரித்திர பதிவேட்டில் உள்ளது. இவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 6 மாதமாக தலைமறைவாகி இருந்த சேதுபதியை இன்று போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். ரவுடி சேதுபதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications