ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதி... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
சென்னை: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஃபனி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஃபனி புயலின் தாக்கத்துக்கு 16 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுர புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கரம் நீட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஃபனி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications