”போச்சே”.. வந்தவுடன் மாயமான ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. ஷாக்கான பெண்கள்! வேலையை காட்டிய வங்கிகள்
சென்னை: கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 பணம் வங்கிக் கணக்கில் வந்துள்ள நிலையில், அந்த பணம் சில நிமிடங்களிலேயே மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.
நேற்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தொகையை பெற தகுதியான பெண்கள் யார் என ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் இதற்கான முகாம்கள் நடைபெற்றன.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி வரை 2 வது கட்ட முகாமும் நடைபெற்றது. இந்த 2 கட்ட முகாம்களிலும், விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதிபெறாத விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. கடந்த 14 ஆம் தேதியே பலரது வங்கிக் கணக்கிற்கு ரூ.1 அனுப்பி பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் ரூ.1000 பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
பெண்கள் தங்களின் செல்போன் எண்ணுக்கு வந்த மெசேஜை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சிலருக்கு நீண்ட நேரம் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆம், வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அபராதமாக பணத்தை எடுத்துக்கொண்டதாக தெரிவித்து உள்ளனர்.

ஜன் தன் வங்கிக்கணக்கை தவிர மற்ற அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம். ஊரக பகுதிகள், நகரங்களுக்கு ஏற்ப இந்த அபராத தொகை மாறுபடும். இந்த இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், கணக்கில் பணம் வந்தவுடன் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.
வங்கிக்கணக்கு தொடங்கும்போதே இதற்கான கையெழுத்தை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் பெற்றுக்கொள்வது வழக்கம். இப்படி 5 பெரிய வங்கிகள் மட்டும் ரூ.21,000 கோடி அபராதம் வசூலித்து உள்ளன. இந்த கணக்கில் தமிழ்நாடு அரசு செலுத்திய ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையும் சேர்ந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications