ட்விஸ்ட்.. எடப்பாடிக்கு சிக்கல்! செய்யாதுரை இடங்களில் நடந்த ஐடி ரெய்டில் சிக்கிய ரூ.500 கோடி சொத்து
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடத்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்துக்கள் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
அதிமுக உட்கட்சிப்பூசல் ஒருபக்கம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

வடவள்ளி சந்திரசேகர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவரும் 'நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை வடள்ளி சந்திரசேகர் இல்லத்தில் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவரது மனைவி ஷர்மிளா, கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

செய்யாதுரை
அத்துடன் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவரும் அரசு ஒப்பந்ததாரருமான செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுரையில் உள்ள விடுதி, வீடு, சென்னையிலுள்ள அலுவலகம், அருப்புக்கோட்டை வீடுகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 4 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

தங்கம், பணம் பறிமுதல்
இந்த சோதனையின்போது, அப்போது, ரூ.183 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாதுரைக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அறைக்குள் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். பின்னர் அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

எடப்பாடியுடன் நெருக்கம்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறையும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு செய்யாதுரை நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதிகாரிகள் அதுகுறித்து செய்யாதுரையிடமும், அவரது மகன்களிடம் நேரடி விசாரணையும் மேற்கொண்டனர்.

ரூ.500 கோடி சொத்துக்கள்
இதற்கிடையே செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் மற்றும் கணினி ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்.












Click it and Unblock the Notifications