திமுக அதிமுக கூட்டணி முயற்சி உண்மையா?.. சி.வி.சண்முகம் புகார்.. மௌனம் கலைத்த அறிவாலயம்!
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் திரண்டுள்ளனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக எடப்பாடி முயற்சி செய்ததாக சி.வி. சண்முகம் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார். சி.வி. சண்முகத்தின் புகார்களுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முக - அதிமுக கூட்டணி முயற்சி என்று செய்தி வந்த அடுத்த நாளே அது வதந்தி என்று கூறிவிட்டோம். இது வெறும் வதந்தி தான். உண்மையான தகவல் இல்லை. சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபியும் கூட அது வதந்தி என்று மறுத்துவிட்டார். எல்லா கட்சிகளும் உடைந்துவிட்டது. திமுக நிலையாக உறுதியாக உள்ளது. திமுகவில் எந்த பிளவும் இல்லை. அதை பிடிக்காதவர்கள் மறுக்கிறார்கள்.

எங்களுக்கு வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்கு கவலையில்லை. விஜயை பொறுத்தவரை திமுக, அதிமுக இருவரையும் எதிர்த்து மாற்றம் வரவேண்டும் என்று ஆட்சிக்கு வந்தார். இப்போது அதிமுகவை உடைத்து அதில் ஒரு அணியை சேர்க்க போகிறாரோ என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். 60 வருடங்களாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தனர். மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லித்தான் வாக்குகளை பெற்றுள்ளனர்.
அவர்களை அமைச்சரவையில் சேர்க்க போகிறாரா விஜய் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு தெளிவடைந்து கொள்ளுங்கள். வெற்றியை பார்த்து வெறி கொண்டும் ஆடவில்லை. தோல்வியை பார்த்து துவண்டுவிடவுமில்லை. திமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சி.வி. சண்முகம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் எங்களை காரணம் காட்டி வெளியேறுகிறார். சி.வி. சண்முகத்தை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.
அவர் எப்போதும் பதவியில் இருப்பார். 2021 சட்டமன்ற தேர்தலில் தோற்றவுடன் மாநிலங்களவை எம்பியானார். இப்போது அதை ராஜினாமா செய்துவிட்டார். சிலருக்கு பதவி அரிப்பு இருக்கும். மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சிகளில் எதிர்க்கட்சிகள் மாறி மாறி இணைந்து மந்திரியாக இணைவார். இந்த கலாசாரம் வட மாநிலத்தில் அதிகம். தமிழகத்தில் மைனாரிட்டி அரசு, கட்சி தாவல்கள் கலாச்சாரம் இல்லாமல் இருந்தது. இப்போது வரத்தொடங்கியுள்ளது.
எங்கள் தலைவர் தெளிவாக முடிவு எடுத்து எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று சொல்லிவிட்டார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் தெளிவாக பேசியுள்ளார். அவர்கள் எங்கோ நுழைவதற்கு எங்களை காரணம் காட்டுகிறார்கள். எவ்வளவு பூட்டி வைத்தாலும் சிலரை அடைத்து வைக்க முடியாது. இவர்களை நீண்ட காலமாக பூட்டி வைத்துள்ளனர். இப்போது ஓடிவிட்டனர். இதற்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை"என்றார்.












Click it and Unblock the Notifications