விட்ற முடியாது.. தமிழ்நாட்டில் விஜயதசமி அணிவகுப்பை நடத்தியே தீருவோம்.. திடீர்னு ஆர்எஸ்எஸ் அதிரடி
சென்னை: உரிய அனுமதிபெற்று தமிழகம் முழுவதும் விரைவில் விஜயதசமி அணிவகுப்பு நடைபெறும் என்று ஆர்எஸ்எஸ் உறுதிபட அறிவித்திருக்கிறது.
விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 22 மற்றும் 29 தேதிகளில், அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது... இதற்காக அனுமதி கோரி, ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்புகள் மனுக்களையும் அளித்தன.. ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

எனவே, இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "நிபந்தனை அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 33 இடங்களில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார்.
அனுமதி: அதுபோலவே, மதுரை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.. இந்த உத்தரவுகளின்படி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு, போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனிடையே, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு, நோட்டீசுகளு அனுப்பப்பட்டிருக்கின்றன.
மேலும், நிபந்தனையுடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், அனுமதி பெற்று, ஊர்வலத்தை நடத்துவோ என்று ஆர்எஸ்எஸ் தென் தமிழக மாநிலத் தலைவர் ஆடலரசன் உறுதி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ளதாவது:
இயற்கை சீற்றங்கள்: இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக களத்துக்கு சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், சாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி தொண்டாற்றி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட விஜயதசமியை முன்னிட்டு தேசத்துக்காக பாடுபட்ட மகான்களின் நினைவை போற்ற, ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். ஆர்எஸ்எஸ் தொடங்கியதிலிருந்து இத்தகைய ஊர்வலம் நாடு முழுவதும் நடக்கிறது.
அனுமதி மறுப்பு: காஷ்மீர் முதல் கேரளா, மேற்கு வங்கம் என்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து வருகிறது. 1963-ம் ஆண்டு டெல்லியில் குடியரசு தின ஊர்வலத்தில் ராணுவத்துடன் சேர்த்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்க அன்றைய பிரதமர் நேரு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 3 ஆயிரம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையுடன் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். இத்தகைய ஊர்வலத்துக்கு சமீப காலமாக தமிழகத்தில் காவல் துறை அனுமதி மறுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
காவல் துறையின் தடையை மீறாமல் நீதிமன்றங்கள் மூலம் அனுமதி பெற்றே அணிவகுப்பை கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடத்தியது. இந்த ஆண்டு விஜயதசமி அணிவகுப்பை அக்.22-ல் நடத்த முடிவு செய்து, காவல் துறையிடம் 2 மாதங்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினர். ஒரு சில மாவட்டங்களில் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
அவமதிப்பு: இதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அனுமதியை நிகழ்ச்சி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இது தொடர்பாக திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை: அணிவகுப்புக்கு அனுமதி பெற தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான அணிவகுப்பு ஊர்வலத்தை உரிய அனுமதி பெற்று விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications