நாங்குநேரி சின்னத்துரைக்கு மாரி செல்வராஜும் ரஞ்சித்தும் ரூ.10 லட்சம் தருவாங்களா? எஸ்.வி.சேகர் கோபம்
சென்னை: ஜாதி படம் எடுப்பவர்கள் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவனுக்கு ஒரு 10 லட்சமோ 20 லட்சமோ கொடுப்பார்களா என பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சின்னத்துரை (17) என்ற மகனும் 14 வயதில் சந்திரா செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இருவரும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். பட்டியலின மாணவரான சின்னத்துரையை சில மாணவர்கள் ஜாதி ரீதியில் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. சைக்கிளில் இருந்து காற்றை பிடுங்கி விடுவது , திண்பண்டங்கள் வாங்கி வர சொல்வது , அவதூறாக பேசுவது என சில மாணவர்கள் சின்னத்துரையிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் அவர் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்.
இந்த ஜாதிய பாகுபாடு குறித்து பள்ளியில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறை அதிகாரி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்கள் இரவு நேரத்தில் மாணவன் சின்னத்துரையின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அதை தடுக்க சென்ற தாய் அம்பிகாவதியையும் காலால் எட்டி உதைத்துள்ளனர். அப்போது சின்னத்துரையின் தங்கை சந்திரா செல்வி அண்ணனை காப்பாற்ற முயன்றார். அப்போது அந்த சிறுமியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் நெல்லை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சின்னத்துரையின் தாத்தா திடீரென நெஞ்சு வலியால் இறந்தார். இந்த நிலையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 மாணவர்களையும் 2 முன்னாள் மாணவர்களையும் கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில் சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவரது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளனர். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறோம். ஆனால் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க போகும் போது என்ன ஜாதி என கேட்கிறார்கள்.
சின்ன வயதிலேயே அந்த குழந்தைக்கு ஜாதி என்றால் என்ன என தெரிய தொடங்குகிறது. இதைவிட காரணம் சினிமா. சினிமாவில் அதிகமாக ஜாதி படங்களை எடுத்ததால்தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையாதான். கொம்பன் என்ற படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர்தான்.
அதன் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்கள் ஜாதி படத்தை எடுப்பதை தொடர்கிறார்கள். தனது ஜாதியை உயர்த்துவது தவறில்லை, ஆனால் அடுத்தவரின் ஜாதியை தாழ்த்திக் காட்டுவதுதான் தப்பு. இன்று ஜாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு ரூ 10 லட்சம், 20 லட்சம் கொடுப்பார்களா என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications