ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக களம் காண்போம்.. சட்டசபைத் தேர்தலில் 36 தொகுதிகளில் போட்டி.. சகாயம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் சகாயத்தின் கட்சி சார்பில் 36 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 10 பேரின் வேட்பாளர் பட்டியலை சகாயம் வெளியிட்டார்.
ஐஏஎஸ் அதிகாரியான நேர்மையான சகாயத்தை நீண்ட நாட்களாக இளைஞர்கள் அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள். ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்த போது கூட சகாயத்தை ரஜினி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் சகாயம் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார் சகாயம். இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது.
இளைஞர்கள்
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஆதம்பாக்கத்தில் அரசியல் களம் காண்போம் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சகாயம் , தன்னை இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுமாறு நீண்ட நாட்களாக அழைத்து வருகிறார்கள். இதனால் அவர்களது அழைப்பை ஏற்று அரசியலுக்கு வருகிறேன் என்றார்.
ஏழைகளுக்கு
இந்த நிலையில் கோயம்பேட்டில் சகாயம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் எனும் எண்ணம் கொண்ட இளைஞர்கள் நான் அரசியலுக்கு வர வேண்டும் என அழைத்தார்கள். ஏழைகளுக்கு பணியாற்ற நான் ஐஏஎஸ் பணியை தொடர்ந்தேன்.
இரு கட்சிகள்
பின்னர் சில காரணங்களுக்காக நான் கடந்த அக்டோபரில் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துவிட்டு ஜனவரி மாதம் அரசு பணியிலிருந்து விடுபட்டேன். குறைவான கால அவகாசத்தில் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் என்னுடைய கட்சியான சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
10 பேரின் பெயர்கள் அறிவிப்பு
எங்கள் கட்சி சார்பில் 36 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த 36 பேரில் 10 பேரின் பட்டியலை சகாயம் வெளியிட்டார். அவர்கள் மேற்கண்ட இரு கட்சிகளின் சின்னங்களிலும் போட்டியிடுவார்கள் என அறிவித்தார். இந்த தேர்தலில் சகாயம் போட்டியிடுகிறாரா என தெரியவில்லை.