ஒரகடம் சிப்காட்டில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்.. சுற்றுச்சூழல் அனுமதி கோரியது செயிண்ட் கோபைன்!
சென்னை: ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூபாய் 2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செயிண்ட் கோபைன் நிறுவனம். இந்த உலகளாவிய மையம் மூலம் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுவரை சுமார் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், சுமார் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது செயிண்ட் கோபைன் நிறுவனம்.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூபாய் 2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளது செயிண்ட் கோபைன் நிறுவனம்.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, கட்டுமான பணிகள் தொடங்கும். ஒரகடம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூபாய் 2,858 கோடி செலவில் அமையவுள்ள உலகளாவிய மையத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மையம் மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தொழில் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 51 ஆயிரம் கோடிக்கான 28 புதிய திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மொத்தமாக 68, 873 கோடி மதிப்புக்கு மேல் திட்டங்கள் தொடங்கப்பட்டதால் , சுமார் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications