கண்டுகொள்ளாத அதிமுக! கவலைகொள்ளாத சரத்குமார்! தனித்து களமிறங்கும் சமத்துவ மக்கள் கட்சி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருக்கிறார்.
கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் முதற்கட்டமாக அவர் வெளியிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்த சரத்குமார், கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் களம் காண முன்வந்துள்ளாராம்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக -காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் தேர்தலில் களம் காண்கின்றன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் என நீண்ட யோசனைக்கு பிறகு அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார்.

வேட்பாளர்கள் பட்டியல்
மேலும், சமத்துவ மக்கள் கட்சிக்கு ஓரளவு நிர்வாகிகள் கட்டமைப்புள்ள மாவட்டங்களான சென்னை, திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதற்கட்டமாக சரத்குமார் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், குறிப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சரத்குமார்.

ஆர்வம் இல்லை
கட்சி தொடங்கிய புதிதில் அது தொடர்பான பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த சரத்குமார், நாளடைவில் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியதால் கட்சிப்பணிகள் சுணக்கம் அடைந்தன. முக்கிய நிர்வாகிகள் பலரும் சரத்குமாருக்கு குட் பை சொல்லிவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். கட்சி தொடங்கியது முதல் பெரும்பாலும் அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்த சரத்குமார் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அங்கிருந்து வெளியேறினார்.

ஊர் ஊராக
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வரும் என எதிர்பார்த்த சரத்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தனித்தே தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்தாராம். ஒரு காலத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும், ஊர் ஊராக திறந்தவெளி வேனில் நின்று சரத்குமார் வாக்குக்கேட்கச் சென்றதும் அவரை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதும் திரும்பிப்பார்க்கத் தக்கது.












Click it and Unblock the Notifications