சென்னை தலைமை செயலகத்தை 28 ஆம் தேதி முற்றுகையிடுவோம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு!
சென்னை: வரும் டிசம்பர் 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை அரசு தரப்புடன் சமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அம்பத்தூரில் நடைபெற்ற முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட பணியாளர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பெண் தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications