என் நண்பன் விஜயகாந்த்.. மீண்டு வருவார்னு நினைச்சேனே! கலங்கிய நடிகர் சரத்குமார் -அண்ணாமலையும் இரங்கல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளார்கள்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், "அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் இரங்கலில், "தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.
தன்னலமற்ற தலைவர். தமிழ் மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.
கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனது திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி வெளியிட்டு இருக்கும் இரங்கல் பதிவில், "ஏழைகளுக்கு உதவும் ஒரு நல்ல மனிதரை தமிழகம் இன்று இழந்துள்ளது. அரசியல் மற்றும் சினிமா என்ற இரண்டு பரிமாணங்களிலும் ஒரே சமயத்தில் ஜொலித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாரட்டும்! ஓம் சாந்தி." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications