தீபாவளி நேரத்தில் இப்படி ஒரு முயற்சியா.. தமிழக அரசு மீது பாய்ந்த சரத்குமார்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக்கில் விற்பனையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தமிழக மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மதுவிலக்கு தான் முதல் கையெழுத்து என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதோடு, படிப்படியாக மதுவை குறைப்போம் என்ற அரசின் உத்தரவாதமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் விமர்சித்துள்ளார்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாட்டில் ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் வி.சி.க., மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு, மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதிக நாட்கள் கூட ஆகாத நிலையில், டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக, 3 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்ட்டர்கள் அமைத்தல், பல இடங்களில் கியூ.ஆர். கோடு பயன்படுத்துதல் போன்ற புதிய வியாபார யுக்திகளை அரசு அறிவித்திருப்பது, மதுவிலக்கு குறித்த அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனையை அதிகப்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தமிழக மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மதுவிலக்கு தான் முதல் கையெழுத்து என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதோடு, படிப்படியாக மதுவை குறைப்போம் என்ற அரசின் உத்தரவாதமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
டாஸ்மாக் கடைகளை குறைத்து, கள்ளுக்கடைகளை தொடங்கும் முயற்சிகளை ஆளும் அரசு இன்னும் சிந்திக்கவில்லை. அதனால், இனியும் மத்திய அரசு மீது அனைத்து பழிகளையும் சுமத்தாமல், மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இதே பிரச்சனை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்ட்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கெனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுன்ட்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுன்ட்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுன்ட்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கெனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications