"ஜாதி பார்த்து வேட்பாளர்.. விசுவாசிகளுக்கு சீட் இல்லை” சசிகலா கட்சிக்குள் கொதிப்பு! கடுப்பில் தலைகள்
சென்னை: சசிகலா கட்சி, ராமதாஸ் உடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குள் அதிருப்தி அலைகள் எழுந்துள்ளன. சசிகலா, தனக்கு நெருக்கடியான காலகட்டங்களில் உடனிருந்த ஆதரவாளர்களுக்கு சீட் தராமல் புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சசிகலா - ராமதாஸ் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவித்தனர்.

அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த சசிகலா, இறுதியாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சசிகலா இதுவரை 5 கட்டங்களாக 80 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியாக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலும், அமமுக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களிலும் சசிகலா கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில் நாளை (ஏப்ரல் 7) பிரச்சாரத்தை தொடங்குகிறார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளை, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தொகுதிகளிலும், 8 ஆம் தேதி போடி, நிலக்கோட்டை, திண்டுக்கல், மேலூர், தொகுதிகளிலும், 9 ஆம் தேதி சிவகங்கை, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் தொகுதிகளிலும், 10 ஆம் தேதி சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் சசிகலா.
இந்நிலையில், சசிகலா கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன. சவாலான காலகட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை சசிகலா சீட் தராமல் புறக்கணித்துவிட்டார் என்று கட்சிக்குள் குமுறல்கள் வெடித்துள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் பூவை கண்டன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சமீபத்தில் இணைந்தவர்களுக்குத் தான் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அதே சமயம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதரவளித்து வந்த நீண்டகால விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் சசிகலா கட்சி நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.
மேலும், சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சவாலான காலகட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை சசிகலா புறக்கணித்துவிட்டார் என்று கட்சியின்ர் கூறுகின்றனர். முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் பூவை கண்டன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவது பற்றி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது சசிகலா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications