அன்று "ஜெ"வுக்கு செய்து கொடுத்த சத்தியம்?.. சசிகலா எனும் நான்... நிறைவேற்ற துடிக்கும் சசிகலா?
சென்னை: சசிகலா வரும் 2027ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க சட்ட ரீதியில் வழிகள் இருக்கின்றனவா என தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு தற்போது விடுதலையாகிவிட்டார். வரும் 7-ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கிறார்.
முன்னதாக அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சிறைக்கு சென்ற சசிகலா அதே கொடி பொருத்தப்பட்ட காரில்தான் வெளியே வர வேண்டும் என விரும்பி வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சட்டரீதியில்
இந்த நிலையில் அவர்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற கருத்தையும் டிடிவி தினகரன் முன் வைக்கிறார். இதனால் பிப்ரவரி 7ஆம் தேதி அதிமுகவில் ஒரு பிரளயம் ஏற்படும் என்றே தெரிகிறது. மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தையும் தான் பொதுச் செயலாளர் என்ற முறையில் சட்டரீதியில் பெறுவார் என தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்
இதனால் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட முயலக் கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை ஆன நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

10 ஆண்டுகள்
அதன்படி தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்த 10 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார் சசிகலா, மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதியாகும். ஆனால் சிக்கிம் மாநில அமைச்சர் பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.

தேர்தல் ஆணையம்
பின்னர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் அவர் மனு அளித்தார். அதை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை நீக்கியது. இதையடுத்து போட்டியிட்டார், பின்னர் முதலமைச்சரானார். இது போன்று சசிகலாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என தேடி வருகிறார்களாம்.

அரியணை
இது தொடர்பாக சசிகலாவும் வீடியோ கால் மூலம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு கைநழுவி போன முதல்வர் அரியணை வாய்ப்பை அவர் தற்போது அடைய நினைப்பார் என கூறுகிறார்கள்.

முயற்சி
மேலும் மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை தெரிந்து கொள்ள ஆழம் பார்க்கவும் சசிகலா திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட விரும்பலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் அதிமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை தனக்கு சாதகமாக மாற்றவும் அவர் முயற்சிக்கலாம் என்கிறார்கள்.

சத்தியம்
சிறைக்கு செல்வதற்கு முன்னர் சசிகலா முதல்வராவதற்கான அனைத்து பணிகள் நடைபெற்றன. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் அவரது முதல்வர் கனவு சுக்குநூறாக நொறுங்கியது. சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதா சமாதியில் சபதம் ஏற்றார். சிறையிலிருந்து வந்து நிச்சயம் முதல்வராவேன் என சமாதியில் அடித்து சத்தியம் செய்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications