சரியாக நேரம் பார்த்து.. எம்ஜிஆர் இல்லத்திற்கு வரும் சசிகலா.. முக்கிய விஐபியை சந்திக்க பிளான்?
சென்னை: நாளை எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு செல்லும் சசிகலா அங்கு முக்கியமான விஐபி ஒருவரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த பிறந்த நாளை கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பாகவும் நாளை சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.
அங்கு அரசு சார்பாக எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்யப்பட உள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அரசு சார்பாக விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இன்னொரு பக்கம்
இதற்காக தமிழ்நாடு முழுக்க விழா எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதாபோல பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்ட வேண்டும். இதற்கான சூளுரைக்க வேண்டிய நாள்தான் எம்ஜிஆர் பிறந்த நாள், என்று அதிமுக உறுப்பினர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டு அழைப்பு விடுத்துள்ளனர். எம்ஜிஆர் பிறந்த நாள் தொடர்பாக சசிகலாவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

சசிகலா
எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை காரணமாக இருந்தன. நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துவோம். தமிழகத்தில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர இந்த நன்னாளில் உறுதிமொழி ஏற்க வேண்டும். தொண்டர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்து இருக்கிறார்.

சசிகலா எம்ஜிஆர்
இந்த நிலையில்தான் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு நாளை காலை 10 மணிக்கு சசிகலா வருகிறார். எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. இது எம்ஜிஆரின் அலுவலகமாக இருந்த இடமாகும். எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாட சசிகலா வருகை புரிவதற்கு பின் வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சசிகலா விஐபி
சசிகலா அங்கு வரக்கூடிய இதே நேரத்தில், எம்ஜிஆரின் சிஷ்யரும் காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு வர திட்டமிட்டுள்ளார். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அங்கு வர இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சசிகலாவையும் திருநாவுக்கரசையும் சந்திக்க வைக்கவும், இருவரும் பேசிக்கொள்ளவும் சசிகலா ஆதரவாளர்கள் சிலர் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் சந்தித்துக்கொண்டால் சசிகலாவிற்கு அது கொஞ்சம் ஆதரவாக இருக்கும் என்று சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா சந்திப்பு
அதிமுகவிற்குள் எப்படியாவது மீண்டும் அடியெடுத்து வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சசிகலா. இதற்காக கடந்த சில வாரங்களாக பல அரசியல் தலைவர்களை சந்திக்க அவர் முயன்று வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்தார். இதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாஜக அண்ணாமலை உள்ளிட்டவர்களை சந்திக்க விரும்பினார் சசிகலா. ஆனால் அந்த சந்திப்புகள் நிகழவில்லை.

விருப்பம் இல்லை
சசிகலா கேட்டும் இவர்கள் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல், அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சந்திப்பு நிகழவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் திருநாவுக்கரசை சசிகலா சந்திக்க இருக்கிறார். இதற்கு முன் அதிமுக, எம்ஜிஆர் அதிமுக, பாஜகவில் இருந்தவர் திருநாவுக்கரசு, இதனால் இவரிடம் பேசுவதன் மூலம் பாஜக தரப்பிடமும், அதிமுக தரப்பிடமும் நெருங்க முடியும் என்ற நம்பிக்கையில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications