வாட்டி வதைத்த சம்பவம்.. மனவருத்தமடைந்த ஜெயலலிதா.. அப்போது போனதுதான் உடல்நலன்.. சசிகலா பரபரப்பு
சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் பெரும் வருத்தம் வாட்டி வதைத்தது என்றும் அப்போது போன உடல்நலனால் அவர் நிறைய பாதிப்புகளை சந்தித்தார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில்: திமுக மற்றும் அதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்து சக்திகளின் சூழ்ச்சிகளிலிருந்து நீதிமன்ற உத்தரவுகளின் வாயிலாக அக்கா வழக்குகளை வென்றெடுத்தார். இதனிடையே தமிழகத்தில் இதுவரை யாரும் செய்திராத பல அரசியல் சாதனைகளையும் அக்கா செய்து முடித்தார்.
இதய தெய்வம் டாக்டர் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை பலமான இரும்பு கோட்டையாக்கி ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக அக்கா தனது அயராத உழைப்பால் உருவாக்கினார். மாநில சுயாட்சி என்பதனை தனது திறமையான ஆட்சியின் மூலமாக நிரூபித்து தமிழகத்தை பாரத திருநாட்டுக்கே ஒரு முன்னுதாராண மாநிலமாக உருவாக்கினார்.

நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றத்தை பொருத்தவரை மூன்றாவது பெரிய கட்சி எனும் அங்கீகாரத்தை அதிமுகவிற்கு பெற்று தந்தார். ஆனால் இந்த சூழலில் யாருமே எதிர்பாரா தருணத்தில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 27.09.14 அன்று அக்காவையும் என்னையும், சுதாகரனையும் இளவரசியையும் தண்டித்து தீர்ப்பளித்தது. எங்கள் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பதாலும் மிகைப்படுத்தப்பட்ட காரணிகளை அந்த பொய் வழக்கு கொண்டிருந்ததாலும் நாங்கள் வழக்கை நன்றாக நடத்திய காரணத்தாலும் எந்த வகையிலும் குற்ற தீர்ப்பு அளிக்க இயலாது எனும் நம்பிக்கையில் நாங்கள் அனைவரும் இருந்து வந்தோம்.

சிறப்பு நீதிமன்றம்
சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்குகள் பொய்யானவை என சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் தாங்கள் நிரூபித்திருந்த சூழலில் பெரும் அதிர்ச்சி தரும் விதமாக 27.09.14 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு எதிரான வகையில் தீர்ப்பளித்து 4 பேரையும் சிறையில் அடைத்தது. தமிழக முதல்வராக தமிழகத்தை விட்டு கிளம்பி சென்ற அக்கா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக அக்கா பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானார். சட்டபடியாக போராடி அந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அக்கா இருந்து வந்தார்.

22 நாட்கள்
சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணை உத்தரவு பெற்று அக்கா தமிழகம் திரும்பினார். அதன் பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எங்களின் மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நடந்து வந்தது. இந்த காலக்கட்டத்தில் அக்கா மனரீதியாக பெரும் போராட்டத்தை எதிர் கொண்டு வந்தார். தமிழக மக்கள் மற்றும் இந்திய அளவிலான அரசியல் பார்வையில் திமுக தனக்கு பெரும் களங்கத்தை சுமத்தி விட்டது எனும் பெரும் வருத்தம் அவரை வாட்டி வதைத்து வந்தது.

கர்நாடகா உயர்நீதிமன்றம்
இதன் காரணமாக அக்காவுக்கு ஏற்கெனவே இருந்து வந்த உயர் ரத்த அழுத்ததமும் உயர் சர்க்கரை அளவும் கூடுதலானது. மன அழுத்தம் அதிகமாக இருந்து வந்ததால் அக்காவின் உடல்நிலையும் அவ்வப்போது சரியில்லாமல் போனது. அதன் பின்னர் பலகட்ட கர்நாடக உயர்நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 27.09.14 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து எங்கள் 4 பேராயும் 11.5.2015 அன்று நிரபராதிகள் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2014 இறுதியிலிருந்து அக்காவுக்கு மன அழுத்தம் கூடுதலான பிறகு வயிற்று போக்கு அடிக்கடி ஏற்பட ஆரம்பித்தது.












Click it and Unblock the Notifications