சசிகலாவிடம் எடப்பாடி வாழ்த்து பெற வருவார்.. ஆனால்.. அதிமுக ராஜன் செல்லப்பா போட்ட கண்டிஷன்!
சென்னை: அதிமுகவிடம் இருந்து சசிகலா ஒதுங்கி கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார். மேலும் அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்தால் ஒருநாள் எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் வாழ்த்து பெற வருவார் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சசிகலா மீது எங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அவர் அந்த மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு அண்ணா வெற்றி பெறும்போது பெரியார் என்ன விமர்சனம் செய்திருந்தாலும், வெற்றி பெற்ற உடனேயே பெரியாரை பார்த்து ஆசி பெற்றார்.

அது போல, இப்போது சசிகலா அமைதியாக இருந்தால், 2026 ஆம் தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்று முதல்வராக ஆகி சசிகலாவை பார்த்து ஆசி பெற வருவார் என்ற சூழல் இருக்கும். அதை விடுத்துவிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பார்த்தால், விளையாட்டு தனம் என்பதா? இல்லை சிறுபிள்ளை தனம் என்பதா? இல்லை வேடிக்கையாக பார்ப்பதா? என்று எங்களுக்கு ஆச்சரியாமாக, வினோதமாக இருக்கிறது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூரில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து, அவர்களை குறி வைத்து அங்கு தான் மோதுகிறார்கள். இவர் மட்டுமல்ல, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் எல்லாரும் அந்த ஒரு சமுதாயத்தையே நோக்கி படையெடுக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் முத்துராமலிங்க தேவர் ஆகிவிட முடியாது.
அதிமுகவில் எந்த வகையில் கேடு விளைவிக்க வேண்டும், அதற்கு இன்னல்களை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அந்த முயற்சியில் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள். அதிமுகவில் எடப்பாடியார் எல்லா சமுதாய மக்களையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார். சசிகலாவின் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் இருந்தது போல் இல்லை.
தன் பெயரின் பக்கத்தில் பொதுச்செயலாளர் என்று போட்டுக்கிறார். தன்னுடைய வேனில் அதிமுக சின்னத்தை போட்டுக்கொள்கிறார். வேண்டும் என்றே இப்படி செய்கிறார். ஏற்கனவே ஒருவர் இப்படித்தான் செய்தார். நீதிமன்றத்தில் ஆனை வாங்கினோம். கடைசியில் அவருக்கு கொடியையும் பயன்படுத்த முடியவில்லை, வேட்டியையும் கட்ட முடியவில்லை. இப்போது சசிகலாவும் இப்படி செய்கிறார்.
அவர்கள் மீது வழக்கு போடுங்கள் என்று தொண்டர்கள் பலரும் வலியுறுத்தினார்கள். ஆனால் எடப்பாடியார் தான், அவர் மீது நல்ல மரியாதை இருக்கிறது. எனவே அவர் மீது வழக்கு போடுவதை தவிர்ப்போம் என்று அப்போது சொன்னார். சசிகலா இப்போது அமைதியாக போயஸ் கார்டனில் இருப்பார் என்றால் நாங்கள் அவருக்கு தகுந்த மரியாதையை கொடுப்போம். எங்களுடை அன்பு அவருக்கு இருக்கும். இதுபோன்று சிறுபிள்ளை தனமான செயலில் ஈடுபட்டால் அதிமுக தொண்டர்கள் பொறுக்க மாட்டார்கள். இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.












Click it and Unblock the Notifications