சசிகலாவுக்கு அதிமுக அவைத் தலைவர் பதவி கொடுங்க.. டெல்லி தூதர் போட்ட கண்டிஷனால் எடப்பாடி ஷாக்!
சென்னை: அதிமுகவுக்குள் சசிகலா என்ட்ரி கொடுப்பது என்னவோ உறுதியாகிவிட்டதாகத்தான் தெரிகிறது. நமக்கு கிடைத்த அண்மை தகவல்களின் படி, சசிகலாவுக்கு அதிமுக அவைத் தலைவர் பதவி கொடுத்து அவரை சேர்த்தாக வேண்டும் என்று டெல்லியில் பேசிய பாஜகவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறினார் என்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிவடைந்தது முதலே அதிமுகவுக்குள் எப்படியாவது நுழைவது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சசிகலா. அதிமுக கொடியை பயன்படுத்துவது, அதிமுக பொதுச்செயலாளர் என கல்வெட்டில் போடுவது, அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை விடுவது என எல்லாவற்றையும் செய்து பார்க்கிறார் சசிகலா.
ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கோஷ்டி மட்டும் எந்த சிக்னல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இடையில் ஓபிஎஸ் கூட சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துப் பார்த்தார். சசிகலாவுடன் எங்கே கை கோர்த்துவிடுவாரோ என்கிற அளவுக்கு கொஞ்சம் ஓவரான சவுண்ட் கொடுத்தும் பார்த்தார். ஆனால் எந்த பாட்சாவும் பலிக்கவில்லை.

எடப்பாடி அணி பலம் குறைவு?
இன்னொரு பக்கம், எடப்பாடிக்கு மிக நெருக்கமான மாஜிக்கள் கூட ஏங்கண்ணே இவ்வளவு பிடிவாதம்.. கொஞ்சம் அமைதியாக இருங்க.. அவங்களும் வந்தா நம்ம கட்சிக்குதானே நல்லதுதானே என சொல்லிப் பார்த்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி தரப்பு நிலைப்பாட்டில் இருந்து இறங்கவில்லை. இதனால் வடமாவட்ட மாஜிக்களை மட்டும் வைத்துக் கொண்டு இப்போது சசிகலா விவகாரம் குறித்து ஆலோசிக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

டெல்லி தலையீட்டால் அதிர்ச்சி
அண்மையில் இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவலைக் கேட்ட அந்த மாஜிக்களும் கூட கொஞ்சம் ஜெர்க் ஆகியிருக்கின்றனர். அதாவது, பாஜகவுக்கு மிக மிக நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை லைனில் அழைத்திருக்கிறார். அப்போது, அதிமுக உட்கட்சி விவகாரங்களை கேசுவலாக பேசிக் கொண்டே இருந்த அந்த தொழிலதிபர் சற்றே கறார் குரலில், உங்க பதவிகளை நீங்க ரெண்டு பேரும் தக்க வைச்சுக்கலாம்.. சசிகலாவுக்கு அவைத் தலைவர் பதவி கொடுத்துடுங்க.. இரட்டை தலைமை என்பது மூன்று தலைமையாக இருந்துட்டு போகட்டும்.. அதுவும் கூட்டுத் தலைமைதானே.. அதைத்தான் இங்க டெல்லியும் விரும்புகிறது என சொல்லி இருக்கிறார். அப்படியா என கொஞ்சம் ஆடிப்போனபடியே கேட்டுக் கொண்டு, கொஞ்சம் டைம் கொடுங்க என கேட்டிருக்கிறாராம்.

சசிகலாவுக்கு சாதகம்
இது தொடர்பாக சசிகலா வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அப்போது, டெல்லி சொன்னபடிதான் சசிகலா, தேர்தலின் போது ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். தேர்தலுக்குப் பின்னர் டெல்லியோ சசிகலாவை கொண்டு கொள்ளவில்லை. டெல்லியின் கவனத்தை ஈர்க்கத்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருவதால் சசிகலாவும் அதிமுகவில் இருக்க வேண்டும் என நினைக்கிறது டெல்லி. அதன் விளைவுதான் தொழிலதிபரின் தலையீடு என்கின்றன அந்த வட்டாரங்கள்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகம்
டெல்லியைப் பொறுத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ்ஸை எப்படி கையாண்டு வருகிறதோ அதேபோல் சசிகலாவையும் இன்னொரு பக்கம் பிடியில் வைத்துக் கொண்டுள்ளதாம். இந்த தைரியத்தில்தான் சசிகலா அதிமுக கொடி, பொதுச்செயலாளர் பதவியை எல்லாம் பயன்படுத்தினாராம். இப்போது டெல்லி தலையீடு தொடங்கி இருப்பதால் சசிகலா தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறது என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications