எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா... ராமாவரம் தோட்டத்தில் மதிய உணவு... பரபரக்கும் 2-வது நாள்..!
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சசிகலா, எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம்தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்
அங்கு அதிமுக பொன்விழா ஆண்டு கொடியை ஏற்றும் அவர், காது கேளாத குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார்.

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், சசிகலா தனது அரசியல் இன்னிங்ஸ் 2.0 வை நேற்று தொடங்கிவிட்டார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்றுள்ளார். அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்திய சசிகலா, அதிமுக பொன்விழா ஆண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

கல்வெட்டி பெயர்
அதைத் தொடர்ந்து அங்கு அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாள் நினைவாக அதிமுக கொடியை சசிகலா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், கொடியை ஏற்றியவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டும் அதில் இடம் பெற்றிருக்கும் வாசகமும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாழ்த்து முழக்கம்
சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், அவர்களை நோக்கி வணக்கம் வைத்தபடியே செல்வதற்கு வசதியாக சசிகலாவின் கார் மெதுவாகவே நகர்ந்தது. அமமுக கொடிகளையும், அதிமுக கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி சசிகலாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதலில் போகஸ் லைட்டை ஆன் செய்ய மறந்து விட்ட சசிகலாவின் ஓட்டுநர், பின்னர் திடீரென அந்த லைட்டை ஆன் செய்தார்.

பரபரப்பு
சென்னை தியாகராயர் நகர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு புறப்பட்டு சென்ற சசிகலா அங்கு காது கேளாத குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. முக்கியப் பிரமுகர்கள் பலர் ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்துப் பேசவுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பரபரக்கும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள சசிகலா இனி அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications