ஹைகோர்ட் தடை இருக்கே.. சசிகலாவுக்கு எப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியும்? வழக்கறிஞர் கேள்வி
சென்னை: சசிகலா, இளவரசி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெறப்பட்டு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பிடிவாரண்ட் எப்படி பிறப்பிக்க முடியும் என வழக்கறிஞர் இளந்தமிழ் ஆர்வலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் இளந்தமிழ் ஆர்வலன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சசிகலா, அவருடைய உறவினர் இளவரசி ஆகியோர் சார்பில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது. அந்த ரிட் மனுவில் சசிகலா, இளவரசி ஆகியோரை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நடத்தும் விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் விலக்கு பெற்றுள்ள நிலையில் எப்படி ஒரு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்குள்ளாக இருக்கிறது. லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற விஷயத்தை லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் கர்நாடகாவில் இந்த வழக்கை பார்த்துக் கொள்ளும் நீதிபதி தெரிவிக்கவுள்ளார்.
உயர்நீதிமன்றத் தடை நிலுவையில் இருக்கும் போது எப்படி இந்த வழக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சசிகலா சார்பில் மனு அளித்தோம். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கானது வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2017 இல் உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் மூவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறையிலிருந்து ஷாப்பிங் செல்வது உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைக்காக ரூ 2 கோடி வரை சிறைத் துறை எஸ்பி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோருக்கு சசிகலா தரப்பு லஞ்சம் கொடுத்ததாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த நேரம் சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்றுவிட்டு வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த வழக்கில் 5ஆவது மற்றும் 6ஆவது குற்றவாளிகளாக சசிகலா, இளவரசியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இரு முறை விசாரணைக்கு நேரில் ஆஜராவதை சசிகலாவும் இளவரசியும் தவிர்த்து வந்த நிலையில் அவர்களை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு லோக் ஆயுக்த நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications