உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மத்தில் இல்லை.. எப்படி வந்தது தெரியுமா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்
சென்னை: உடன்கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மத்தில் வரவில்லை என்றும் பெண்கள் கற்பை காப்பாற்றிக்கொள்ள தொடங்கப்பட்ட நிகழ்வுதான் இது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புது விளக்கம் அளித்துள்ளார்.
சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது அந்த கூட்டத்தில் இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட போதிலும் அவர் எதிர்ப்பை தெரிவிக்காததால் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார்.

இன்னும் ஒரு வார காலத்தில், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி சேகர்பாபு தனது பதவியிலிருந்து விலகாததால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் வள்ளுவர் கோட்டம் அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தின்போது அண்ணாமலை பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.
சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அதனை அருகில் அமர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்து ரசிக்கிறார். உலகம் முழுவதும் இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு இப்போது பல்டி அடித்திருக்கிறார்கள்.
திமுகவினர் பேசுவது போல இந்துத்துவம் தான் சனாதனம் என்றால், இந்தியாவில் கிறிஸ்தவமும், இஸ்லாமியமும் காலூன்றியிருக்க முடியுமா? சனாதனத்தை எதிர்க்கவே திராவிட இயக்கங்களும் தோன்றியதாக திமுக வெட்டி பொய்களை சொல்லி வருகிறார்கள்" என்றெல்லாம் சரமாரியாக தாக்கி பேசினார். தொடர்ந்து பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மத்தில் கிடையாது என்று கூறிய அண்ணாமலை இது தொடர்பாக பேசியதன் விவரம் வருமாறு:-
விதவைகள் உடன் கட்டை ஏறுவது எப்போது வந்தது. சனாதன தர்மம் கொண்டு வந்ததா? அந்நிய படையெடுப்பு வந்த பிறகு அந்த படையெடுப்பில் ஒரு ராஜாவோ வீரனோ கொல்லப்பட்டால் அவருடைய மனைவியும், தங்கையையும் அம்மாக்களையும் பரிசு பொருளாக எடுத்து செல்ல ஆரம்பித்தார்கள்.
சனாதான தர்மத்தை பற்றி புரியாத ஆதிக்கத்தில் வந்தவர்கள் போரிலே கொல்லப்பட்ட பிறகு பெண்களை இங்கே இருந்து தூக்கிட்டு போக ஆரம்பித்தார்கள். அதனால்தான், கணவர் இறக்கும் போது அந்த பெண்ணும் தன்னுடைய கணவரோடு உடன்கட்டை ஏற ஆரம்பித்தார். இது சனாதன தர்மத்தில் வரவில்லை. அந்த பெண்ணின் கற்பை காப்பற்றுவதற்காக ஆரம்பிக்கட்ட ஒரு நிகழ்வு" என்றார்.












Click it and Unblock the Notifications