தில்லாலங்கடி எஸ்பிஐ! செல்லாத பத்திரத்திற்கும் பணம்! மத்திய அரசு தந்த யுவி லைட் ஐடியா!
சென்னை: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை அளிப்பதன் மூலம் எஸ்பிஐக்கு என்ன சிக்கல்?
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வங்கிய கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப் பான எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை எஸ்பிஐ வங்கி பிடிகொடுத்துத்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஏனென்றால், நேற்றே இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், "இந்த நீதிமன்றம் உங்கள் மீது அவமதிப்பு வழக்கைத் தொடுக்கும்.
ஆனால் அதற்கான அவசியத்தை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்" என்று சொல்லி மறைமுகமாக எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
ஆகவே எஸ்பிஐ வங்கி அடிபணிந்தே ஆகவேண்டும். அடுத்தபடியாக தரவுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். ஆணையம் உடனடியாக அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

முன்பு தரவுகளை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வங்கிக்கு இந்த மாத கடைசி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அதாவது முன்னால் வழங்கப்பட்ட உத்தரவின்படி மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். அதை மார்ச் 29 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், கால அவகாசம் போதாது என நீதிமன்றத்தில் முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று முன்பு கொடுத்திருந்த அவகாசத்தை குறைத்து, இன்று மாலைக்குள் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறிவிட்டது. இதனால் 29 வரை இருந்த அவகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆகவே விரைவில் தேர்தல் ஆணையமும் தரவுகளை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடக் கூடும்.
அதை உணர்ந்துதான் தேர்தல் ஆணையருக்கு மறைமுகமாக அழுத்தம் தரப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது ஒரே ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார். ஆகவே, அந்தப் பணிகளை உடனே செய்வது கடினம் என ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதன்மூலம் தேர்தல் காலம் வரை அதை வெளிவராமல் தடுத்துவிட பாஜக அரசு முயற்சி செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
முன்பு ஒரே ஒரு தேர்தல் ஆணையர்தான் இருந்தார். ஒரு நபர் மட்டுமே உயர் பதவியில் இருப்பதால், அவரை ஆளும் அரசு அடி பணியவைத்துவிடலாம் என்று சந்தேகித்தே மூன்று பேரை தலைமைத் தேர்தல் ஆணையராக அமர்த்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
இப்போது மீண்டும் பழைய மாதிரியே ஒரே ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற நிலைமையை நாடு சந்தித்துள்ளது.

ஆக, எஸ்பிஐக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்து ஆவணங்களைப் பெற்றுவிட்டாலும் அதைத் தேர்தல் ஆணையம் உரியக் காலகட்டத்திற்குள் வெளியிடுமா என்பது சந்தேகமாகி உள்ளது.
வங்கியைப் பார்த்து 'குறைந்த பட்ச நேர்மைகூட உங்களிடம் இல்லையா?' என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அடுத்து இதே ஷாக் ட்ரீட்மெண்ட்டை தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றம் வழங்க வேண்டி வரலாம்.
இந்த வழக்கில் எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே வாதாடினார். அவர், 'நாங்கள் தேர்தல் பத்திரங்களை இரண்டு கோப்புகளாக வைத்திருக்கிறோம். ஒன்றில் யார் பத்திரத்தை வாங்கினார்கள் என்பதை வைத்துள்ளோம்.
அடுத்த கோப்பில் யாருக்கு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை வைத்துள்ளோம். அதை இரண்டையும் நாங்கள் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் ஆவணங்களை அளிக்க வேண்டும். அதற்காகத்தான் அவகாசம் கேட்கிறோம்' என்று நீதிமன்றத்தில் சொன்னார்.

அதற்கு நீதிபதிகள், 'உங்களிடம் ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படையுங்கள் என்றுதான் சொன்னோம். அதை ஒப்பிட்டு அளிக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தீர்ப்பைக் கூட சரியாகப் படிக்கவில்லையா?" என்று ஒரு போடு போட்டார்கள்.
மேலும், 'நீதிமன்றம் 26 நாள்கள் அவகாசம் கொடுத்துள்ளது. அத்தனை நாள்கள் போதாதா?' என்று ஆவேசமாக நீதிபதிகள் எஸ்பிஐ வழக்கறிஞரைப் பார்த்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்தளவுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் வேகத்தைக் காட்டியதில்லை. இந்தத் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் ஏதோ அநீதி உள்ளது என நீதிமன்றம் மிகத் தீவிரமாக நம்புகிறது என்பது மட்டும் உறுதி.
நீதிமன்றத்திடம் இந்தக் கால அவகாசம் போதாது என வாதாடுகிறார் எஸ்பிஐ வங்கி வழக்கறிஞர்.

ஆனால் 2019 தேர்தலுக்கு முன்பாக 2 நாள்களில் எஸ்பிஐ வங்கி, இந்த விவரங்களை மத்திய அரசுக்கு அளித்திருந்தது என்பது இப்போது வெளியாகி வரும் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது 26.10.2017 தேதியிட்டு எஸ்பிஐ வங்கி, நிதியமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அதில் தேர்தல் பத்திரங்களை ஆவணப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே சீரியல் நம்பர் போட்டு அதனடிப்படையில் நாங்கள் அதைப் பதிவு செய்வதற்காக அனுமதியை வழங்க வேண்டும் என்று கேட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு 5.2.2018 தேதியிட்டு மத்திய அரசு ஒரு அனுமதியை அளிக்கிறது. அதில் யுவி லைட் மூலம் அறியக் கூடிய அளவுக்காகச் சிறிய எண்களை அச்சிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கிறோம். நேரடியாக இந்த எண்களைப் பார்க்கமுடியாது.

யுவி லைட் மூலம் மட்டுமே பார்க்கக் கூடிய மாற்றத்தை எஸ்பிஐ வங்கி செய்தது. அப்படி 2 நாளில் செய்த வேலைக்கு இப்போது ஏன் எஸ்பிஐ இத்தனை மாதம் அவகாசம் கேட்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அந்தக் கேள்வியில் கூட ஏதோ அர்த்தம் உள்ளதாகவே தெரிகிறது.
இதைப் போலவே 2021 இல் கொரோனா அலைக்குப் பிறகு 1 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள காலாவதியான 10 பத்திரங்களைக் கொண்டுவந்து எஸ்பிஐ வங்கியில் பணமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த முயற்சி டெல்லிக் கிளையில் உள்ள ஒரு எஸ்பிஐ வங்கியில் நடக்கிறது.
அப்போது பத்திரங்கள் காலாவதியாகிவிட்டதால் பணமாக மாற்றித் தரமுடியாது என வங்கிக் கிளை பதிலளிக்கிறது. அதற்கு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலிலிருந்ததால், உரியக் கால அவகாசத்திற்குள் வர முடியவில்லை.
ஆகவே, அதற்காக விதிமுறைகளைத் தளர்த்தி, பணமாக மாற்றித் தரவேண்டும் என்று அந்தக் கட்சி சார்பாகக் கோரிக்கை வைக்கப்படுகிறது. உடனே இது குறித்து மும்பை தலைமையக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு . ஒரே நாளில் பணமாக மாற்றி தரப்படுகிறது.
இப்போது இந்த விவரங்கள் இப்போது நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை அளிப்பதில் வங்கிக்கு என்ன சிக்கல் உள்ளது? என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கலாம்.
வங்கிக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மத்திய ஆளும் கட்சிக்கு உள்ளது என்று சொல்லப்படுகிறது. அதைத்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
இந்தப் பத்திரத்தில் உள்ள விவரங்களை வெளியிட்டு விட்டால் அதில் யார் யார் எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என விவரம் தெரியவந்துவிடும்.
நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரிய பணக்காரர்கள் பண மோசடி செய்துவிட்டு, வாங்கியை ஏமாற்றிக் கடன்பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களைப் போன்றவர்கள் பாஜக அரசுக்கு நிதி அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் உண்மை உள்ளதா எனத் தெரியாது. அது வழக்கறிஞர்களின் வாதமாக உள்ளது.
மேலும் பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு வாங்கி உள்ள கடனை தள்ளுபடி செய்துள்ளது. அப்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிதி அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, அது குறித்த விவரங்களும் வெளியாகிவிடும்.
இது தேர்தல் காலம் என்பதால் மத்திய அரசு மறைமுகமாக வங்கிக்கு அழுத்தம் தருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்ட பிறகு 18 சுரங்கங்களுக்கான அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு பாஜக அரசு அளித்துள்ளது என்ற ஒரு குற்றச்சாட்டை நீதிமன்றத்திலேயே வைத்துள்ளார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.
இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி சட்டவிரோதமானது என கடந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தனர். அந்த சட்டவிரோத பணம் இந்த மக்களவை 2024 தேர்தலில் செலவு செய்யப்படக் கூடாது என்பதே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள நீதி.
அவகாசத்தை நீட்டிப்பதன் மூலம் அந்தப் பணம் தேர்தல் காலத்தில் புழங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். அப்படிப் பார்த்தால் அது கூட கருப்புப் பணத்தின் மூலம் பெறப்பட்ட வெற்றி ஆகிவிடும். அது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. ஆகவேதான் உச்சநீதிமன்றம் சாட்டையைச் சரியாகச் சுழற்றி வருகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications