நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில்... தனியார் பள்ளிகளில் 40% கட்டணம் செலுத்தினால் போதும்..!
சென்னை: நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தக்கோரி தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதாக, பெற்றோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வருகின்றன.
தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75% மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40% கட்டணத்தை மட்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி அவகாசம் அளித்து வசூல் செய்யலாம்.
மீதமுள்ள 35% கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் இரண்டு மாத காலம் அவகாசம் அளித்து வசூல் செய்யலாம். மீதமுள்ள 25% கட்டணத்தை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை அறிந்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஒரே தவணையில் 75% கட்டணத்தை கட்டக்கோரி பெற்றோருக்கு தர்மசங்கடத்தை கொடுத்த தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட்டுள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications