காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இன்றே 2ஆம் பருவ பாட புத்தகங்கள் விநியோகம்!
சென்னை: தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. காலாண்டுத் தேர்வுக்கு பிறகு 8 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு கிளம்பி வருகின்றனர். இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 8 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் இன்றே வழங்கப்பட உள்ளன. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதேபோன்று இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இரண்டாம் பருவத்துக்கான கற்றல் - கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications