ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்! விண்ணை அதிர வைத்த முழக்கம்! எஸ்.டி.பி.ஐ. நடத்திய பேரணி!
சென்னை: தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஆளுநர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறை அனுமதி காரணத்தால், அதற்கு முன்னதாகவே மேடை அமைக்கப்பட்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டன.
அதன் விவரம் வருமாறு;

யார் யார் பங்கேற்பு?
கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாப்புலர் ஃப்ரண்ட் , விடுதலை சிறுத்தைகள், மே17 இயக்கம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். பேரணியில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் உரையாற்றிய விவரம் வருமாறு;

தமிழர் விரோதம்
''தாங்கள் நியமிக்கும் ஆளுநர்களைக் கொண்டு ஒரு மாநில அரசுகளின் செயல்பாடுகளை தடுத்து வைப்பது, மாநில அரசின் உரிமைகளை தர மறுப்பது என்பன போன்ற கூட்டாட்சிக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.''

நீதிமன்றம் அதிருப்தி
''பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஆளுநர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன.''

குலக்கல்வி
''மக்களுக்கான மசோதாக்களை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடும் மாநில அரசை மதிக்காத போக்கு, கல்வியில் சமூகநீதியை சீர்குலைத்து குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை சக்தியாய் வலம் வருவது, பாசிச இந்துத்துவ சித்தாந்த கொள்கைப் பிரச்சாரங்களை மேடையேற்றுவது, தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.''

ஆளுநரை திரும்பப்பெறுக
''தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை முடக்கும் ஆளுநரின் இதுபோன்ற விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஆளுநரை திரும்பப்பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும்.'' என நெல்லை முபாரக் கூறினார்.












Click it and Unblock the Notifications