பிரதமர் முன்னால் முதல்வர் அப்படி பேசியதில் தவறேயில்லை! ஸ்டாலினின் துணிச்சலை வரவேற்கும் எஸ்.டி.பி.ஐ!
சென்னை: பிரதமர் மோடி முன்னால் முதலமைச்சர் ஸ்டாலின் அப்படி பேசியதில் தவறேயில்லை எனத் தெரிவித்துள்ளது எஸ்.டி.பி.ஐ. கட்சி.
பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்தியிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முதல்வர் பேச்சை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பிரதமர் நிகழ்ச்சி
சென்னையில் நேற்று நடைபெற்ற பல்வேறு திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் துவக்க நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் வரவேற்கத்தக்கவை. பிரதமர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் வழக்கமாக நிகழும் பாராட்டுரை என்பதைத் தாண்டி, வரி பகிர்வு, நிதி பங்களிப்பு உள்ளிட்ட விசயங்களில் ஒன்றிய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

பாராட்டத்தக்கது
நீட் விலக்கு மசோதா, கச்சத்தீவு மீட்பு, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கல், இந்திக்கு இணையாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்பாடு, உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு உள்ளிட்ட தமிழகத்துக்கு ஒன்றிய அரசு செய்ய வேண்டிய விசயங்கள் குறித்த தமிழக முதல்வரின் கோரிக்கைகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

பாஜக சாடல்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் போட்டி அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி முன்னால் திமுக அரசியல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் பாஜக கடுகடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவை தாரை வார்த்ததே கருணாநிதி தான் என்றும் அதனை மீட்க வேண்டும் என தமிழகத்தில் யார் பேசினாலும் பேசலாம் ஸ்டாலின் அதைப்பற்றி பேசவே தகுதியில்லை எனவும் அண்ணாமலை சாடினார்.

பேச்சுக்கு வரவேற்பு
பாஜக இவ்வாறு குற்றஞ்சாட்டினாலும் கூட, நேற்றைய தினம் மனதில் தோன்றியதை தமிழக உரிமை பிரச்சனைகளை பிரதமர் மோடி முன்னிலையில் அவரை மேடையில் வைத்துக் கொண்டே ஸ்டாலின் துணிச்சலாக பேசியதற்கு ஒருபக்கம் பாராட்டும் வரவேற்பும் வந்துகொண்டு இருகின்றன.












Click it and Unblock the Notifications