திடீரென வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்ற தலைமை செயலக ஊழியர்கள்
தலைமை செயலக ஊழியர்கள் நாளை நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்ப பெறப்பட்டது.
Recommended Video
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் திடீரென இன்று தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர்களின் கோரிக்கைக்கு, நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை முன்வைத்து, அவற்றினை ஏற்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு விட்டது.
உணவு இடைவேளை
முன்னதாக தலைமை செயலக ஊழியர்களும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தலைமை செயலக ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் உணவு இடைவேளையின்போது ஒன்றாக கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசுக்கு அதிர்ச்சி
பிறகு சனி, ஞாயிறு லீவு முடிந்து நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டுவிட்டு, வேலைக்கு போகாமல் திரும்பவும், தலைமை செயலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் 30ம் தேதி அதாவது நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் அறிவித்தார். இது அரசு தரப்புக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 பேர் சஸ்பெண்ட்
இதனிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலக ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
திடீர் வாபஸ்
இந்நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் நாளை அறிவித்திருந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்துள்ளது. தலைமை செயலக ஊழியர்கள் சங்க தலைவரின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.