யாருக்காவது ஓட்டு போடுங்கள்; நோட்டாவுக்கு மட்டும் போடாதீர்கள்.. வேண்டுகோள் வைக்கும் சீமான்!
சென்னை: அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் என்னை கரைத்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார்.
அரசியல் என்பதை மக்களுக்கு சேவையாற்றும் ஒரு தொண்டு என்பதனை மறந்து பணம் சம்பாதிக்கும் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள் என்று சீமான் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள் தீவிர பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தன்மானம் காப்பேன்
இந்த நிலையில் ஆவடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் கூறியதாவது:- பெரிய கட்சிக்காரர்கள் 56 கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். நான் காட்டுக்குள் திரியும் புலி போன்று சிங்கிளாக வருவேன். என்னை கூட்டணி வைக்க சொல்கிறார்கள். 10 சீட்டு, 20 சீட்டுகளுக்கான என் தம்பி தங்கைகளை அடமானம் வைக்க மாட்டேன். கொள்கைக்காக தன்மானம் காப்பேன்.

பணம் சம்பாதிக்கும் கம்பெனி
அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் என்னை கரைத்து விடுவார்கள். வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோரின் நிலையை பாருங்கள். அவர்களை கரைத்தது போல் என்னையும் கரைத்து விடுவார்கள். நான் மெதுவாக வருவேன். ஆனால் பொதுவாக வருவேன் அரசியல் என்பதை மக்களுக்கு சேவையாற்றும் ஒரு தொண்டு என்பதனை மறந்து பணம் சம்பாதிக்கும் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள்.

நோட்டாவுக்கு ஓட்டு போடாதீர்கள்
அ.தி.மு.க, தி.மு.க.வினர் ஒரு கோடி, இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு அவர்கள் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். ஒட்டு போடவில்லையென்றால் தேசத் துரோகம். யாருக்காவது ஓட்டு போடுங்கள். பெரிய புரட்சிக்கர சிந்தனையாளர் மாதிரி, நாங்க தான் சமூக மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி நோட்டாவிற்கு ஓட்டுப்போட்டு கேவலப்படுத்தக்கூடாது என்று சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications