எங்கப்பாவை போல சீமானையும் ஒழிப்பீங்களா? வெடிகுண்டு, துப்பாக்கி இருக்கா? வீரப்பன் மகள் ஆவேசம், கதறல்!
சென்னை: நடிகை பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரவு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமான வித்யா தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆவேசமடைந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகை பலாத்கார வழக்கில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானர். சீமானை இரவு 8 மணிக்கு ஆஜராக வரவழைத்தனர் போலீசார்.

இதனால் சென்னை வடபழனி சொகுசு விடுதியில் இருந்து புறப்பட்டார் சீமான். ஆனால் நடுவழியிலேயே நாங்கள் சொல்லும் நேரத்துக்கு வரலாம் என்று போலீசார் உத்தரவிட சுமார் 1 மணிநேரம் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகேயே நடு சாலையில் காத்திருந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு மேல், சீமானை காவல் நிலையத்துக்கு வரவழைத்தது போலீஸ்.
ஆனால் சீமானின் வாகனம், காவல் நிலையத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சீமானை காவல்நிலையத்துக்குள் அழைத்துச் சென்றது போலீஸ்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமாகிய வித்யா தாமும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, நாங்கள் ஒருவர் பின்னால் நின்றால் உயிர் போகிறவரை நிற்போம். என்னையே ஏன் பார்த்து இவ்வளவு பயப்படுறீங்க? என்னை அனுப்புவதாகத்தானே சொன்னீங்க.. அப்புறம் ஏன் தடுத்து பிரச்சனையை உருவாக்குறீங்க? நான் ஏதாவது பேசினேனா? ஆட்சியும் அப்படித்தான்... போலீசும் அப்படித்தான்.. அரசாங்கமும் அப்படித்தான்.. என்னமா நினைச்சுகிட்டு இருக்கீங்க.. உங்க கையில் எதுவும் இல்லை.. மேல சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்.. உங்க பரிதாபமான நிலைமை புரியது..

ஒரு தனிமனிதனை அரசியல் செய்யவிடாம இப்படி பண்றீங்க.. எங்கப்பனை ஒழிச்சீங்க.. அடுத்த தலைமுறை தமிழன் வந்தா அவரை ஒழிக்க ஆயிரம் வழி தேடுவீங்களா? நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது.. யார் மக்கள் பிரச்சனையை பேசுறாங்கன்னு கண்ணுக்கு தெரியலையா? இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன். இவ்வாறு வித்யா கூறினார்.












Click it and Unblock the Notifications