‛‛தயங்கிய பெரிய கட்சிகள்’’.. 2 பொது தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளராக்கிய நாம் தமிழர் சீமான்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2 பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு பொதுத்தொகுதி வழங்க திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தயங்கும் நிலையில் சீமான் அதனை செய்து காட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் அனைத்து சாதியினருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த தனித்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட முடியும். மற்றவர்கள் போட்டியிட முடியாது. தனி தொகுதியை பொறுத்தமட்டில் எஸ்சி, எஸ்டி என 2 வகைகளாக உள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகளாக உள்ளன. அதாவது திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட முடியும். மற்றவர்களால் களம் காண முடியாது.
இதனால் பல சமயங்களில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு பொதுத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் கூட திமுக, அதிமுக, பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தனித்தொகுதிகளில் மட்டும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை களமிறக்கி உள்ளது. ஆனால் பொதுத்தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி 7 தனித்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி 2 பொதுத்தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் போட்டிடுகின்றனர். அதன்படி பொதுத்தொகுதியான ஆரணி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். இவர் பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர். டாக்டரான பாக்கியலட்சுமியை எதிர்த்து திமுகவில் தரணிவேந்தன், அதிமுகவில் கஜேந்திரன், பாஜக கூட்டணியான பாமகவில் கணேஷ்குமார் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் பொதுத்தொகுதியான திண்டுக்கல்லில் நாம் தமிழர் வேட்பாளராக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த கைலைராஜன் போட்டியிடுகிறார். டாக்டரான இவரை எதிர்த்து திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளராக முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல இடங்களில் பொதுத்தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களாக பட்டியலினத்தை சேர்ந்தவர்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் பல கட்சிகளும் அதனை செய்ய மறுக்கின்றனர். ஏனென்றால் பட்டியலினத்தவரை வேட்பாளராக்கினால் பிற சமுதாயத்தினரின் வாக்கு கிடைக்காதே என்ற அச்சம் தான் இதற்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சீமானை பொறுத்தமட்டில் எனக்கு சாதி பார்த்து ஓட்டுப்போட்டால் அத்தகைய ஓட்டு எனக்கு வேண்டாம். அது எனக்கான ஓட்டு அல்ல. தீட்டு என மேடைகளில் முழங்கி உள்ளார். அதன்படியே தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் 2 பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications