முதல்வருக்கு நன்றி.. வெளிநாட்டில் கருத்து சுதந்திரம் பேசும் பிரதமர் என்ன சொல்ல போகிறார்.. சீமான்
சென்னை: வெளிநாடுகளில் கருத்து சுதந்திரம் குறித்து பேசும் பிரதமர் எனது ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு என்ன சொல்ல போகிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அது போல் அவருடைய கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெரிவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான் ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருந்தார்.

மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தியின் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. இவர்களது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். அவர் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டேன். என்னுடன் தொடர்புடைய 20 பேரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கருத்து சுதந்திரம் குறித்து வெளிநாடுகளில் பேசும் பிரதமர் எங்களது ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு என்ன சொல்ல போகிறார். எனது ட்விட்டர் கணக்கு முடக்கத்தை கண்டித்த முதல்வருக்கு நன்றி என சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications