ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் சீமான்! நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டி!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், தைப் பொங்கல் நாளான இன்று வேட்பாளரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மா.கி.சீதாலட்சுமி கட்சியின் மாறில, மண்டல, மாவட்ட தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின் நால் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தமாக 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இன்று முதல் பொங்கல் விடுமுறை என்பதால் இனி ஜனவரி 17 ஆம் தேதி ஒரு நாள் தான் வேட்பு மனு தாக்கல் செய்யமுடியும். திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அன்றைய நாளில், வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications