சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு லிஸ்ட் ரத்து! புது பட்டியல் தயாரிக்க சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்காக வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய பட்டியலை 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 621 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்த நிலையில், எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு நடைமுறைகள் முடிந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முறையில் உரிய இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி விண்ணப்பதாரர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, புதிய தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் லிஸ்ட்டில் இடம் பெற்று இருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை என்றும் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லாமல் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் கூறி 100 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது எனவும், முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய தேர்வு பட்டியலை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க, ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என். பால்வசந்தகுமாரை நீதிமன்றம் நியமிப்பதாகவும், அவருக்கு உதவியாக எஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை ஒருங்கிணைப்புக்கு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிமன்றம், தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிபதியிடம் அதிகாரிகள் அளிக்க வேண்டும். அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புதிய பட்டியலை தயாரித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் " என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications