எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய 38 பல்கலைக்கழகங்கள்! நினைவுகூறும் செல்வப்பெருந்தகை!
சென்னை: வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செல்வப்பெருந்தகை விடுத்துள்ள பதிவு வருமாறு;

''இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார். இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர்.
'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' என்று அடிக்கடி கூறுவார். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பல பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications