தமிழக ஆளுநரின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா.. ரவியை திரும்ப பெறுங்கள்.. செல்வப்பெருந்தகை
சென்னை: இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று பெற்றோர்களிடம் ஆளுநர் கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஆளுநர் மாளிகையில் 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். இதில் பங்கேற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி ஆளுநரிடம் நீட் விலக்கு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆளுநர் ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். அதாவது நீட் விலக்கு மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, "நெவர், எவர், கிவென்" என்று ஆளுநர் பதிலளித்துள்ளார்.

அதாவது எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் தான் தோன்றித்தனமாக பேசியுள்ளார். ஆளுநரின் ஆவணப் பேச்சுக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான மோகன்காமேஸ்வரன், பழனிச்சாமி, முகமதுரீலா, பாலாஜி, தணிகாசலம், ராமமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி, கங்காராஜசேகர், ஆர்.பி.சிங், கே.எம்.ஷெரியன், கஸாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் ஆளுநரே!
தமிழ்நாட்டின் ஆளுநர், அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை சிதைக்கின்றார். அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு, உண்மைக்கு புறம்பாக, எந்தவொரு தரவுகள் இல்லாமலும் அவர் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து ஆண்டுக்கு70 ஆயிரம் கோடி ரூபாயை லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போவதாக இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications