அதிமுகவை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பாஜக.. அந்தக் கட்சிக்கு என்ன உதவி செய்தோம்? செங்கோட்டையன் கேள்வி
ஈரோடு: அதிமுகவை 4 ஆண்டுகள் கட்டிப்பிடித்து காப்பாற்றிய பாஜகவுடன் கூட்டணியில் இருந்து முக்கியமான நேரத்தில் வெளியேறியதாக செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தடுமாற்றத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமி ஒன்றை பேசி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 8 மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார் செங்கோட்டையன். இதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இதனிடையே செப்டம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ செங்கோட்டையன் ஆலோசனையை ஏற்காமல், அவரின் அடிப்படை உறுப்பினர் தவிர்த்து அத்தனை பதவிகளையும் பறித்தார். இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் இணைந்து செங்கோட்டையன் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனிடையே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், அதிமுக தொண்டர்களின் உணர்வை தான் வெளிப்படுத்தினேன். அந்தியூர் தேர்தலில் துரோகம் செய்துவிட்டேன் என்று எடப்பாடி கூறி இருக்கிறார்.
அதற்கான பதிலை விரைவில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டவரின் வாரிசு வெளியிட உள்ளார். அன்று யார் பொறுப்பில் இருந்தார் என்று எண்ண வேண்டும் 2021 தேர்தலில் நான் பொறுப்பில் இல்லை. குற்றம் செய்தவர்களுக்கே பதவியை கொடுத்து, அவருடன் நட்புடன் இருக்கும் நிலை உள்ளது. சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி எப்படி பதவியை பெற்றார் என்று நாடறியும்.
டிடிவி தினகரன் வாபஸ் பெற்ற பின், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் அழைத்து, இரட்டை தலைமையுடன் பயணித்தோம். தற்போது ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவை 4 ஆண்டுகள் கட்டிப்பிடித்து காப்பாற்றிய பாஜகவுக்கு என்ன உதவி செய்தோம். 2024ல் தான் பிரதமர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், பாஜக தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது தமிழ்நாட்டில் புதிய தடுமாற்றத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார். 2024ல் மட்டுமல்லாமல் 2026 மற்றும் 2029லும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு ஊரிலும் ஒரு பேச்சை பேசிக் கொண்டிருக்கிறார். இதனை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications