கலைஞர் எழுதுகோல் விருது! யார் அந்த அதிர்ஷ்டசாலி? பரிசும்,சான்றிதழும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 1953-ஆம் ஆண்டு தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்து 70 ஆண்டுகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி வரக் கூடியவர்.
இவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் நாளை வழங்கி கவுரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கலைஞர் எழுதுகோல்
2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சண்முகநாதன்
இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் நாளன்று வழங்கப்படும். அதன்படி, 'கலைஞர் எழுதுகோல் விருது'க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் அவர்கள் 1953-ஆம் ஆண்டு 'தினத்தந்தி'யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் திரு.சண்முகநாதன்.

நாளை பரிசு
அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட 'வரலாற்றுச் சுவடுகள்' நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது. கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications