யமஹாவிடம் பாடம் கற்கட்டும் சாம்சங்.. முதல்வருக்கு மூத்த பத்திரிக்கையாளர் திருஞானம் கோரிக்கை
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு அமைப்பு தொழிற்சங்கம் வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் விவகாரத்தில் கடந்த சில நாட்களாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சங்க அனுமதி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக் அரசு பதில் அளித்து வருகிறது. இந்த விவகாரத்தில் யமஹாவிடம் பாடம் கற்கட்டும் சாம்சங் என்று கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த பத்திரிக்கையாளர் திருஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளர் திருஞானம் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "பந்தலைப் பிரித்த வேகத்தில் கூட்டணியையும் பிரித்துவிடாமல் இருந்தால் சரிதான்" என்று ஒரு இதழ் நக்கலுடன் எழுதி இருப்பதை, தாங்கள் சீரியஸாக எடுத்து தீர்வுகாண வேண்டும் என்பது இந்த அரசின் நலன் நாடும் என்னைப் போன்றோரின் வேண்டுகோள். தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது என்பது தொழில் நிறுவனங்களின் கடமை. இது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை.

BMW, ஹூண்டாய் போன்ற பல பெரு நிறுவனங்கள், தொழிற்சங்கத்தை அனுமதிக்கவே மாட்டோம் என்று முதலில் சொல்லி வந்தன. பின்னர் அனுமதித்தது மட்டுமல்ல, தொழிற்சங்கத்தின் பயன்களை தற்போது புரிந்துகொண்டுள்ளன. சாம்சங் நிர்வாகத்துக்கு இதனை எடுத்துச் சொல்லி தொழிற்சங்கத்தை ஏற்கச் செய்வதுதான் சாதுர்யமான ஒரே வழி. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் CITU வுக்கு எதிராகவும்,கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிராகவும் பரப்பப்படும் கருத்துக்கள் முதிர்ச்சி அற்றவை.
'பல பெரு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதற்கு CITU தான் காரணம்' என்ற பதிவுகளை தி.மு.க ஆதரவாளர்கள் சிலரே கூட பகிர்வது வேதனைக்குரியது. உண்மையில். வெளியேறிய நிறுவனங்கள்,முதலீட்டுச் சிக்கல், வரி வழக்குகள், போட்டியாளர்களின் சவால் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை. இதை அந்தந்த நிறுவனங்களே கூட விளக்கி இருக்கிறார்கள். CITU, தொமுச உள்ளிட்ட எந்த தொழிற்சங்கங்கத்தின் நோக்கமும் ஆலைகளை மூடவைப்பது அல்ல. குரலற்றுத் தவிக்கும் தொழிலாளர்களின் குரலாக நின்று அடிப்படை உரிமைகள் பெற்றுத் தருவதும், பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காண்பதுமே ஆகும். இதற்கான ஒரு
கிளாசிக் உதாரணம் YAMAHA.
யமஹா நிறுவனம் தொழிற்சங்கத்தை ஏற்க மாட்டோம் என்று பிடிவாதமாகச் சொல்லி வந்தது. 63 நாட்கள் தொடர் போராட்டத்துக்குப்பின் CITU சங்கம் அங்கு அமைந்தது. தற்போது அங்கு உற்பத்தித்திறன் முன்பைவிட அதிகரித்துள்ளது. Premium Two Wheeler Hub ஆக சென்னை மையம் மாறி வருகிறது என்று கடந்த மாதம் யமஹா பெருமிதம் தெரிவித்துள்ளது. இதை மட்டும் சாம்சங் நிறுவனத்துக்குப் புரியவைத்தால் போதுமானது.
சில வாரங்களுக்கு முன் சாம்சங் நிறுவன பொறுப்பில் இருந்த ஒரு கொரிய அதிகாரி சிஐடியு சங்கத்தை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருந்தார். அவர் மாற்றப்பட்டபின் வந்தவர்களை சில தொழிலாளர் விரோத ஆலோசகர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். முந்தைய கொரிய அதிகாரியின் மனநிலைக்கு புதியவர்களைக் கொண்டு வந்தாலே சிக்கல் தீர்ந்துவிடும்.
இதற்காக ஆலை தரப்பிலும் தொழிற்சங்க தரப்பிலும் சுமுகமான சூழலை உருவாக்க என்னைப்போன்ற சில நண்பர்கள் தீவிர முயற்சி செய்தோம்.இருப்பினும் சில அவசர முடிவுகள், தொழிற்சங்கத்துக்கு மட்டுமல்ல கூட்டணிக்குள்ளும் நெருடல்களை உருவாக்கியுள்ளன. அன்பு முதல்வர் அவர்களே, தோழர்களை அழைத்துப் பேசுங்கள்.
தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் முந்தைய கொரிய அதிகாரியின் மனநிலைக்கு புதியவர்களைக் கொண்டு வர அரசுக்கு வழிகாட்டுங்கள். நிதி முதலீடுகள் குவியட்டும்..! அதே வேளையில், திராவிட மாடல் கோட்பாட்டின்படி எல்லாரும் எல்லாமும் பெறட்டும்..! " இவ்வாறு மூத்த பத்திரிக்கையாளர் திருஞானம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications