ஐசியூவில் செந்தில் பாலாஜி.. திடீர் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை: அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் கடந்த ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

முதலில் அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன்பிறகு தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை என்பது கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி நடந்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காகும். அதாவது கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பணிக்கு அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு செய்த அமலாக்கத்துறை அவரை கடந்த ஆண்டு கைது செய்தது. அதன்பிறகு அவரிடம் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்தது. அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அமலாக்கத்துறை விசாரணைக்காக அவரை அழைத்து சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் உடல்நலனை காரணம் காட்டி செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரினார். ஆனால் அமலாக்கத்துறை எதிர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மாறாக அவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் சிறையில் மதிய உணவு சாப்பிட்ட செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாலை சுமார் 3.30 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அவர் ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications