செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் சொன்னவர்தான் ஸ்டாலின்! நடவடிக்கை எடுத்தால் அரசியல் என்பதா: அண்ணாமலை
சென்னை: அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவாதாக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று மோசடி என வழக்கு உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படியே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி தொடர்பாகவே விசாரணை நடக்கிறது. பணத்தை திருப்பி அளித்து விட்டோம் என்று கூறினால் தவறு சரியாகிவிடாது.
சட்டரீதியாக நடக்கும் விசாரணையில் எங்கே அரசியல் காழ்புணர்ச்சி வந்தது? செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கூறினார். செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது 2019 ல் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை தப்பிக்கவைக்க அரசு தரப்பில் முயன்றதால்தான் உச்சநீதிமன்றம் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி மொரிசியஸ் உட்பட அயல் நாடுகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரம் ஹார்ட் டிஸ்க் மூலமாக தெரிய வந்தது . இதன் காரணமாக அமலாக்கத்துறை தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வந்தது?
அமலாக்கத்துறை முறைப்படி நடத்திய சோதனை எந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி என கூறியது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டில் குளித்தலையில் செந்தில் பாலாஜி மீது புகார்களை கூறி முதலமைச்சர் பேசியுள்ளார். அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் இருந்தாலும் அதற்கென தனி அதிகாரிகள் உள்ளனர். உரிய சான்று இருப்பதால் தான் அமலாக்கத்துறை அமைச்சரின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.
முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை மதிப்பவர் என்றால் அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications