ஞாபகம் வச்சிக்க! என்ன யாரும் அடிக்க முடியாது! ஸ்டாலின் வெளியிட்ட பரபர வீடியோ! யாருக்கு மெசேஜ்? ஆஹா
சென்னை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீடியோவை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், ‛‛ஞாபகம் வச்சிக்க.. என்ன யாரும் அடிக்க முடியாது'' எனக்கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையை தொடர்ந்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை களத்தில் குதித்தது.

சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். மொத்தம் 17 மணிநேரம் வரை சோதனை நடந்தது. சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறி அழுதார். இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை நேற்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது தோளை தட்டி ஆறுதல் கூறினார். இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவை எப்படி பாஜக மிரட்டியது என்பதை ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மத்திய விசாரணை அமைப்புகள் எப்படி ஒருதலைபட்சமாக பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்களை குறிவைத்து ரெய்டு நடத்துவது பற்றி ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். அதோடு மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் வீடியோ ஒன்றை மேற்கொள் காட்டி முதல்வர் ஸ்டாலின் சொன்ன மெசேஜ் தான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
அதாவது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ‛‛அதிமுகவை போல் பிற கட்சிகளை மிரட்டி பணிய வைத்து விடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைக்கிறது போன்ற கட்சி திமுக இல்லை. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை திமுககாரர்கள். சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு திமுககாரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்.
நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். ‛என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது...' என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.

எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு -தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம்.
அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம்'' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த வீடியோ மெசேஜ் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மத்திய பாஜகவை எதிர்க்க முழுவீச்சில் துணிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications