முடிவு தெரியுமா? செந்தில் பாலாஜி வழக்கை இன்று விசாரிக்கிறார் 3 வது நீதிபதி சிவி கார்த்திகேயன்
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவேறு தீர்ப்புகளை அளித்த நிலையில் இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதை தொடர்ந்து அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் இருவருமே மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்தார். அதே நேரம் நீதிபதி பரத சக்கரவர்த்தி அதற்கு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று கூறிய அவர் அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம் என்றும், அதன் பின்னர் சிகிச்சை வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் செந்தில் பாலாஜி வழக்கில் முடிவு கிடைக்காததை தொடர்ந்து வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயனை தலைமை நீதிபதி நியமித்து உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சிவி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications